தீக்குளித்த தொண்டருக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கினார் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்
தீக்குளித்த தொண்டருக்கு முன்னாள் முதல்வர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.
சென்னை: முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி காஞ்சிபுரத்தை சேர்ந்த மூசா என்பவர் நேற்று தீக்குளித்தார். இதையடுத்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை நேரில் சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கினார்.
சசிகலா தரப்புடன் ஏற்பட்ட மோதல் காராணமாக அதிமுக ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டாக பிரிந்துள்ளது. இதைத்தொடர்ந்து பெரும்பான்மை எம்எல்ஏக்களை வைத்திருந்த சசிகலா தரப்பு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக அறிவித்தது.
இதைத்தொடர்ந்து சசிகலா அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு நேற்று பதவியேற்றது. இருப்பினும் தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமே முதல்வராக நீடிக்க வேண்டும் என மக்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
ஓபிஎஸே வேண்டும்
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வமே முதல்வராக நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி தொண்டர் ஒருவர் தீக்குளித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் தீவிர தொண்டர்
காஞ்சீபுரம் மாவட்டம் பெரிய காஞ்சீபுரம் பல்லவர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் மூசா என்பவர் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதிமுகவின் தீவிர தொண்டர் ஆவார்.
தொண்டர் தீக்குளிப்பு
இவர் நேற்று எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்கப் போகும் தகவல் வெளியானதும் மிகுந்த மன உளைச்சல் அடைந்தார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக நீடிக்க வேண்டியும், ஜெயலலிதா சமாதியில் சசிகலா ஆவேசமாக அடித்ததை கண்டித்தும் மூசா தீக்குளித்தார்.
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்ப்பு
உடனே அவரை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அதிர்ச்சியடைந்த ஓபிஎஸ் சந்திப்பு
அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலைய்ல அ.தி.மு.க. தொண்டர் ஒருவர் தனக்காக தீக்குளித்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
ரூ.1 லட்சம் நிதி வழங்கிய ஓபிஎஸ்
பின்னர் தீக்காய வார்டில் சிகிச்சை பெற்று வரும் மூசாவை சந்தித்து நலம் விசாரித்ததுடன், அவரது உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார். மூசாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து அங்குள்ள டாக்டர்களிடம் கேட்டு அறிந்தார். பின்னர் மூசாவுக்கு நிதி உதவியாக 1 லட்சம் ரூபாயை ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.