என்னை கடித்த கொசுக்களை ஒழி.. நடு ராத்திரி செல்போன் டவரில் ஏறி ஒரு போராட்டம்!
நள்ளிரவில் செல்போன் டவரில் ஏறி ஒருவர் போராட்டம் நடத்தினார்.
பட்டுக்கோட்டை: நம்ம ஆளுங்க இப்போ எல்லாத்துக்குமே போராட்டம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. 20, 30 வருஷத்துக்கு முன்னாடியே இதுக்கெல்லாம் போராட்டம் பண்ணியிருந்தால் இப்போ கொஞ்சமாவது நாம குறையில்லாம இருந்திருப்போம்!! இந்த சம்பவத்தை படிங்க, புரியும்!!
பட்டுக்கோட்டை அருகே உள்ள ஊர் வளவன்புரம். இங்கு சரவணன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் ஒரு கட்டிட தொழிலாளி. இவருக்கு பிரியதர்ஷினி என்ற 18 வயது மகள் இருக்கிறார். மகள் மீது சரவணனுக்கு அலாதி பிரியம். இந்நிலையில் பிரியதர்ஷிணிக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அதனால் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆபரேஷன் நடந்து முடிந்து பிரியதர்ஷினி இன்னமும் ஆஸ்பத்திரியில்தான் இருக்கிறார்.
இப்படியா கொசு கடிக்கிறது?
அதனால் தினமும் ராத்திரி நேரங்களில் ஆஸ்பத்திரியில்தான் சரவணன் படுத்து கொள்கிறார். அப்படித்தான் ஆஸ்பத்திரி வராண்டாவில் சரவணன் நேற்றுமுன்தினம் தூங்கி கொண்டிருந்தார். ஆனால் கொசு அவரை பிடுங்கி எடுத்துவிட்டது போலும்!! நடுராத்திரி எழுந்து கொண்ட சரவணன், "இப்படி கொசு இருக்கே? எப்படி தூங்கறது? எங்களுக்கே இப்படி கொசு தொல்லை இருக்குதுன்னா, நோயாளிகளுக்கு எப்படி இருக்கும்?" என்று சத்தம் போட ஆரம்பித்துவிட்டார்.
இவ்வளவு கொசு இருக்கலாமா?
சரவணனின் சத்தத்தை கேட்டு தூங்கி கொண்டிருந்த எல்லோருமே விழித்து கொண்டார்கள். உடனே ஆஸ்பத்திரி செக்யூரிட்டிகள் ஓடிவந்து, "ராத்திரி நேரத்தில் இப்படியா சத்தம் போடறது? பேஷன்ட்டுகள் தூங்கிட்டு இருக்காங்க" என்று பதிலுக்கு சரவணனை திட்டினார்கள். ஆனாலும் சரவணனை யாராலும் அடக்கவே முடியவில்லை. "ஒரு கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரிக்குள்ளே இவ்ளோ கொசுக்கள் இருக்கலாமா?" என்று கேட்டுக் கொண்டே ஆஸ்பத்திரியில் இருந்து பட்டுக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துவிட்டார்.
நடுராத்திரி 2.30 மணி
ஸ்டேஷன் அருகில் ஒரு செல்போன் டவரில் கடகடவென ஏற ஆரம்பித்துவிட்டார். உச்சிக்கு போய் உட்கார்ந்து கொண்டு தற்கொலை மிரட்டல் விடுக்க ஆரம்பித்தார் சரவணன். அப்போது மணி நடுராத்திரி 2.30.
180 அடி உயரம்
இதையடுத்து விஷயத்தை அறிந்து உடனடியாக போலீசார், தீயணைப்பு வீரர்கள் என எல்லோருமே விரைந்து வந்தார்கள். கீழே இறங்கும்படி எல்லோரும் சொன்னார்கள். ஆனால் சரவணனுக்கு அவர்கள் பேசியது கேட்கவே இல்லை. ஏனென்றால் அந்த டவர் 180 அடி உயரத்திற்கு இருந்தது. அதனால் போலீசார் மைக்கை எடுத்து வந்து அதில் பேசி சமாதானப்படுத்த பார்த்தார்கள்.
கலெக்டர் வரணும்
அதற்கு சரவணன், "நான் கீழே இறங்க மாட்டேன். ஆஸ்பத்திரியில ஒரே கொசுக்கடி, நோயாளிகள் அங்கே அவஸ்தை பட்டுட்டு இருக்காங்க. உடனே அடிப்படை வசதி செய்து கொடுங்க, ஆர்.டி.ஓ. இல்லாட்டி கலெக்டர், ரெண்டு பேருல யாராவது ஒருத்தர் இப்ப, இங்க வந்தாகணும்... அப்போதான் இறங்குவேன்" என்றார்.
கண்டித்து அனுப்பினர்
3 மணி ராத்திரிக்கு என்ன செய்வதென்றே போலீசார் கடைசியாக ஆஸ்பத்திரி வார்டில் இருந்த பிரியதர்ஷினியிடம் போய், "உங்க அப்பா இப்படி பண்ணிட்டு இருக்கார், நீயே போனில் அவருகிட்ட பேசும்மா" என்றனர். இதையடுத்து பிரியதர்ஷினி செல்போனில் அப்பாவிடம் பேசியதையடுத்து, சரவணன் கீழே இறங்கினார். அப்போது மணி விடிகாலை 5.30!! பிறகு போலீசார் அடிப்படை வசதிகளை கண்டிப்பாக செய்கிறோம் என்று கூறியதுடன், சரவணனை கண்டித்து அனுப்பி வைத்தனர்