நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்ப்பு கூட்டத்தில் ஆவுடையப்பன் என்ற நபர் தீக்குளிக்க முயற்சி செய்தார்.
நாகர்கோவில்: நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்ப்பு கூட்டத்தில் ஆவுடையப்பன் என்ற நபர் தீக்குளிக்க முயற்சி செய்தார். காலையிலேயே பலத்த பாதுகாப்புக்கு இடையில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கந்துவட்டி கொடுமை காரணமாக நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனர். இந்த உருக்கமான சம்பவத்திற்கு பிறகு அனைத்து கலெக்டர் அலுவலகங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதன்படி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வரும் பொதுமக்கள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ள அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் கொண்டு செல்லும் பை உள்பட அனைத்து உடமைகளும் பரிசோதனைக்கு பிறகே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது.
சுசீந்திரம் பகுதி மக்களின் அடிப்படை வசதிகளான தெருவிளக்கு, குடிநீர், சாலை வசதி போன்ற பல்வேறு கோரிக்கைகளுக்காக பல முறை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. மனுநீதி நாளின் போதும் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் தீக்குளிப்போம் என மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி நிர்வாகிகள் அறிவித்திருந்தனர்.
இந்த போராட்டத்திற்காக அந்த கட்சியின் மாவட்ட செயலாளர் பால்ராஜ் தலைமையில் நிர்வாகிகள் ஆவுடைகண்ணன், கவிதா, ராமஜெயநாயர், கேப்டன் சிவா ஆகியோர் அங்கு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளு முள்ளும் ஏற்பட்டது.
அப்போது திடீரென ஆவுடைகண்ணன், பாட்டிலில் தான் வைத்திருந்த மண்எண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து போலீசார் மடக்கி பிடித்து அவர் தீக்குளிப்பதை தடுத்தனர். தொடர்ந்து தீக்குளிப்பு போராட்டத்துக்கு வந்த 5 பேரையும் கைது செய்தனர்.