ஜெயலலிதாவின் மகன் எனக்கூறி வாலிபர் கலாட்டா.. சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு
இந்த ஜென்மத்தில் நான்தான் ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு என்பதாகவும், இதை கமிஷனரிடம் கூற வேண்டும் என்றும் வாலிபர் தெரிவித்தார்.
சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு. நேற்று பிற்பகலில் ஒரு வாலிபர் வந்து கமிஷனரை சந்திக்க வேண்டும் என்று கூறி பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசாரிடம் முரண்டுபிடித்தார்.
போலீசாரோ, முதலில் நீங்கள் என்ன புகார் கொண்டு வந்துள்ளீர்கள் என்று கூறிவிட்டு பிறகு கமிஷனரை பார்க்கலாம் என்று கூறினர்.
அதற்கு அந்த வாலிபர், தான், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பூர்வ ஜென்மத்தில் மகனாக பிறந்ததால், இந்த ஜென்மத்தில் நான்தான் ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு என்பதாகவும், இதை கமிஷனரிடம் கூற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதைக்கேட்ட போலீசார் அதிர்ச்சியடைந்தனர். தகவல் கிடைத்துதம், வேப்பேரி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால், அதற்குள்ளாக, அந்த வாலிபரோ "நான் ஜெயலலிதாவின் மகன். என்னை இவ்வளவு நேரம் வெயிலில் காத்திருக்க வைத்திருக்கிறீர்கள் உங்கள் அனைவரையும் என்ன செய்கிறேன் பார்" என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் கமிஷனர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் வேப்பேரி போலீசார், அந்த வாலிபரிடம் பேசி, அவரை காரில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில், விழுப்புரம் மாவட்டம், சி.மெய்யூர் கிராமத்தை சேர்ந்த அழகேசன் மகன் ஜெயகணேஷ் (38) என்றும், இவர் மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தெரியவந்தது.
சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்த போது அங்கிருந்து தப்பி கமிஷனர் அலுவலகம் வந்துள்ளார். இவர் பலமுறை ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதே போயஸ் கார்டனுக்கு சென்று இதேபோல் கூறி வந்ததும் தெரியவந்தது. பின்னர் அவரிடம் இருந்த செல்போனில் உள்ள எண்ணை எடுத்து போலீசார் ஜெயகணேஷின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி, அவரின் தாய் மல்லிகா காவல் நிலையத்திற்கு வந்து மகனை அழைத்து சென்றார்.