கொண்டைக்குள் தங்கக் கட்டி கடத்தி வந்த மைதிலி... ஜட்டிக்குள் தங்கம் கடத்தி வந்த கொண்டையா!
சென்னை: தனது கொண்டைக்குள் 300 கிராம் மதிப்புள்ள 3 தங்கக் கட்டிகளை மறைத்துக் கடத்தி வந்த 35 வயது பெண்ணையும், அதேபோல ஜட்டிக்குள் 200 கிராம் கொண்ட தங்க பிஸ்கட்களை மறைத்து வந்த கொண்டையா என்ற ஆணையும் சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்டுபிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
விதம் விதமான முறையில் தங்கம் கடத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடிதான் இருக்கிறது.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் நூதன முறையில் தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்த இருவரை போலீஸார் பிடித்துள்ளனர்.
குவைத் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ஆந்திர மாநிலம் கரீம்நகரை சேர்ந்த கொண்டையா (31) என்பவர் சுற்றுலா பயணியாக குவைத் சென்று வந்திருந்தார்.
அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. அவரது உடமைகளை சோதனை செய்தனர். எதுவும் சிக்கவில்லை. கொண்டையாவை தனியறைக்கு கொண்டு சென்று, சோதனை செய்தனர். அப்போது, உள்ளாடைக்குள் தலா 200 கிராம் கொண்ட 2, 100 கிராம் கொண்ட தங்க பிஸ்கட்டுகளை ஜட்டிக்குள் பதுக்கி வைத்திருந்தார். இதன் சர்வதேச மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும். அவர் கைது செய்யப்பட்டார்.
அதேபோல அதே விமானத்தில் பயணித்த 35 வயதான மைதிலி. இவரும் கரீம் நகரைச் சேர்ந்தவர்தான். இவர் மீ்தும் சந்தேகம் வந்தது. காரணம் இவரது தலையில் இருந்த கொண்டை வழக்கத்தை விட வித்தியாசமாக காணப்பட்டது.
இதையடுத்து இவரை தனியறைக்குக் கொண்டு போய் பெண் ஊழியர்கள் மூலம் கொண்டையை சோதனையிட்டனர். கொண்டையை அவிழ்த்து பார்த்தபோது தலைமுடிக்குள் இவர் 3 தங்கக் கட்டிகளை புதைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
இதன் சர்வதேச மதிப்பு ரூ.9 லட்சம் ஆகும். இருவரையும் போலீஸாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இருவரும் கைது செய்யப்பட்டனர்.