கிடைக்கும்.. ஆனா கிடைக்காது நிலையில் மாயமான ஏஎன்-32 ராணுவ விமானம்!
சென்னை: கடந்த ஒரு மாத காலமாக தேடப்பட்டு வரும் மாயமான இராணுவ விமானம் ஏஎன்-32 இன்னும் கிடைத்தபாடில்லை. 4 கப்பல்கள் தேடியும் அதில் பயணம் செய்த 29 வீர்ர்கள் அணிந்திருந்த உடையின் ஒரு சின்ன துண்டு கூட சிக்கவில்லை.
கடந்த மாதம் 22ம் தேதி காலை 8.30 மணிக்கு சென்னை தாம்பரம் விமானப்படைத் தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமான் தலைநகர் போர்ட் பிளேருக்கு புறப்பட்டது ஏஎன்-32 இராணுவ சரக்கு விமானம்.
திட்டப்படி காலை 11.45 மணிக்கு போர்ட் பிளேரை அடைந்திருக்க வேண்டிய இந்த விமானம், புறப்பட்ட கொஞ்ச நேரத்திற்கெல்லாம் மாயமாகிவிட்டதாக ரேடார் கருவிகளில் தகவல் பதிவானது. அதன் பிறகு அந்த விமானம் என்ன ஆனது என்று இன்னும் தெரியவில்லை. அதில் பயணம் செய்த 29 வீர்ர்களின் நிலை என்ன என்பதும் கேள்விக் குறியாகவே இருக்கிறது.
மாயமான விமானம் கடலில் விழுந்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போர்க் கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தேடும் வேட்டையில் தீவிரப்படுத்தப்பட்டன. ஆனாலும் பலன் இல்லை.
தொடர்ந்து தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையத்துக்குச் சொந்தமான சாகர்நிதி கப்பல், மத்திய புவியியல் ஆராய்ச்சித் துறைக்குச் சொந்தமான சமுத்திர ரத்னாகர் ஆகிய 2 ஆராய்ச்சிக் கப்பல்களும் தேடுதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதுதவிர, நிருபக் என்ற கடற்படை கப்பலும் ஒரு நீர்மூழ்கிக் கப்பலும் ஆழ்கடலுக்குள் சென்று விமானத்தை தேடும் பணியை செய்தன.
இந்நிலையில், பூமியில் இருந்து மூன்றரை கீலோ மீட்டர் ஆழத்தில் விமானத்தின் ஒரு பாகம் என்று சந்தேகப்படும் ஒரு மர்மப் பொருள் கிடப்பதாக தகவல் வெளியானது. ஆனால் கிடைத்த பாகமும் ஏஎன்-32 விமானத்தின் பாகம்தான் என்று உறுதியாக சொல்ல முடியாது என்றும் ஆய்வு செய்த பின்னரே எதுவும் சொல்ல முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். ஏஎன்-32 விமானம் மாயம் பற்றி திரும்பவும் பூஜ்சியத்தில் இருந்துதான் தொடங்க வேண்டி இருந்தது.
ஒரு மாத காலம் முடிந்த பின்னரும், கிடைக்காமல் போன மாயமான விமானம் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், காணாமல் போன ஏஎன்-32 விமானம் குறித்து தகவல் எதுவும் இல்லை என்று தெளிவாக சொல்லிவிட்டார்.
கடந்த மாதம் இதே நாளில் தான் ஏஎன்-32 இராணுவ விமானம் காணாமல் போனது. உண்மையில் என்ன நடந்தது. எப்படி காணாமல் போனது என்ற மர்மத்தை அதி நவின கருவிகளாலும் அவிழ்க்க முடியாமல் இருக்கிறது என்பதுதான் பெரிய கொடுமை. விமானத்தில் பயணம் செய்த 29 உயிர்களின் உறவினர் படும் பாடு அதைவிட கொடுமை. விமானம் குறித்து ஏதாவது தகவல் கிடைத்துவிடாதா என்ற நம்பிக்கையை கைவிடாமல் காத்திருப்போம்...