தென்காசியில் ரூ1.30 கோடி கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட 'கொலையாளி' கைது!
தென்காசி: நெல்லை மாவட்டம் தென்காசியில் கள்ள நோட்டுக்கள் அடித்த வழக்கில் சிக்கிய நபர் ஏற்கனவே ஒரு பயங்கர கொலை வழக்கில் சிக்கி கைதானவர் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லை மாவட்டம் தென்காசியில் ரூ. 1.30 கோடி மதிப்புள்ள 2000, 500, 100 ரூபாய் கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தென்காசி அருகிலுள்ள சுரண்டையில் கள்ள நோட்டு கும்பல் ஒன்று சிக்கியுள்ளது. இதுதொடர்பாக சாமித்துரை, அசன் ஆகிய 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கள்ள நோட்டு அச்சடித்த இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் சாமித்துரை என்பவர் பயங்கர கொலை வழக்கில் சிக்கி கைதானவர் என்று தெரிய வந்துள்ளது.
அச்சன் புதூர் பகுதியை சேர்ந்த சண்டியர் ராஜகோபால் என்பவரை கடத்தி நெல்லை அருகே கொண்டு சென்று தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்தான் சாமிதுரை. பின்னர் ஜாமீனில் வெளியே வந்த சாமிதுரை தற்போது கள்ள நோட்டு வழக்கில் சிக்கியுள்ளார்.