"திரிஷா" குட்டியை இன்று முதல் பார்வையாளர்கள் பார்த்து ரசிக்கலாம்... வண்டலூரில்!
சென்னை: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிதாக பிறந்த நீர்யானைக் குட்டியை இன்று முதல் பார்வையாளர்கள் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகையான விலங்குகளும், பறவைகளும் ஏராளமாக உள்ளன.
இதனைக்காண தினமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து கண்டு களித்துவிட்டு செல்கின்றனர்.
குட்டி நீர்யானை:
இதுகுறித்து பூங்கா செய்தி குறிப்பில் கூறுகையில், "அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் 4 வயதுள்ள திரிஷா என்ற பெண் நீர்யானை, 16 வயதுள்ள வாம்பூரி என்ற ஆண் நீர்யானையுடன் இணை சேர்ந்து அழகிய குட்டி ஒன்றை கடந்த நவம்பர் மாதம் 17 ஆம் தேதி ஈன்றது.
7 நீர்யானைகள்:
குட்டியின் பாலினம் வளர்ந்த பிறகே தெரியவரும். இத்துடன் பூங்காவிலுள்ள நீர்யானைகளின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளன. இதில் 3 ஆண், 3 பெண் மற்றும் ஒரு பாலின அடையாளம் தெரிய வராத ஒரு குட்டியும் அடங்கும்.
கடல் வாழ் உறவினர்கள்:
பார்ப்பதற்கு பன்றி போல் காணப்பட்டாலும், நீர்யானைகளின் நெருங்கிய உறவினர்கள் திமிங்கலம், டால்பின் போன்ற கடல் வாழ் இனங்களாகும். இவைகள் நீர்நில வாழ் பொது மூதாதையரிடமிருந்து 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இரு கிளைகளாகத் தோன்றிய உயிரினங்களாகும்.
நீர் மாற்ற வேண்டிய தேவை:
பூங்காவில் நீர்யானை பராமரிக்கப்படும் தொட்டிகளிலேயே நீர்யானை சாணங்களைக் கழிப்பதால் ஒவ்வொரு வாரமும் நீர் மாற்ற வேண்டியுள்ளது. மாற்றப்படும் நீரை வீணாக்காமல் சுமார் ஒரு ஹெக்டேர் பரப்பளவில் பராமரிக்கப்படும் புல் தோட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
இன்று முதல் அனுமதி:
இதனால் நீர் வீணாக்கப்படாமல் மறுசுழற்சி செய்யப்படுகிறது. மற்ற புல் தோட்ட புற்களைவிட, இப்புல் தோட்டத்தில் விளையும் புற்களையே நீர்யானை விரும்பி சாப்பிடுகிறது. மேலும் இதனை இன்று காலை முதல் பார்வையாளர்கள் கண்டுகளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று பூங்கா நிர்வாகம் தனது செய்தி குறிப்பில் கூறியுள்ளது.