கழுதைக்கும், நாய்க்கும் கல்யாணம்- காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த 65 இந்து முன்னணியினர் கைது
திருப்பூர்: காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் கழுதைக்கும், நாய்களுக்கும் திருமணம் செய்து வைத்த இந்து முன்னணியைச் சேர்ந்த 65 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆண்டுதோறும் காதலர் தினத்துக்கு ஒரு சில அமைப்புகள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு நூதன போராட்டங்களிலும் அந்த அமைப்பினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் சீர்திருத்த திருமணம் என்ற பெயரில் கழுதைக்கும், நாய்களுக்கும் திருமணம் செய்து வைக்கும் போராட்டம் திருப்பூர் பழைய பஸ் நிலையம் முன் நேற்று நடந்தது.
அங்கு கழுதை, இரண்டு நாய்களின் கழுத்தில் மாலைகள் அணிவித்து மணமக்கள் போல் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பின்னர் ஒரு கழுத்தைக்கு, 2 நாய்களையும் திருமணம் செய்துவைத்தார்கள்.
அப்போது காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதில் கோவை கோட்ட பொதுச்செயலாளர் செந்தில்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் சேவுகன், செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நெல்சன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து, அனுமதியின்றி இத்தகைய போராட்டம் நடத்திய இந்து முன்னணியைச் சேர்ந்த 65 பேரை கைது செய்து திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இந்த சம்பவத்தால் திருப்பூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் நேற்று காலை திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.