தினகரனை எதிர்த்தால் இதுதான் கதி! மன்னார்குடியை வாட்டும் புது சென்டிமெண்ட்
தினகரனை மையப்படுத்தி வரும் புதிய சென்டிமெண்ட்டால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் மன்னார்குடி உறவுகள்.
Recommended Video
சென்னை தினகரனை மையப்படுத்தி வரும் புதிய சென்டிமெண்ட்டால் மன்னார்குடி உறவுகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்
டி.டி.வியை எதிர்க்கும் நபர்கள் ஒன்று சிறைக்குச் செல்ல வேண்டும் அல்லது நிம்மதி இல்லாமல் இருக்க வேண்டும். அப்படித்தான் அண்மைக்காலங்களில் சில சம்பவங்கள் நடந்துள்ளன' என்கின்றனர் அவர்கள்.
டி.டி.வி.தினகரனுக்கும் திவாகரனுக்கும் இடையிலான நேரடி மோதல், உச்சத்தை எட்டியுள்ளது. அம்மா அணி என்ற பெயரில் மன்னார்குடியில் அலுவலகத்தைத் திறந்த திவாகரன், சென்னையிலும் புதிய அலுவலகத்தைத் திறக்க இருக்கிறார்.
புதிய சென்டிமெண்ட்
அதேநேரம், தினகரன் அணியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளை தன்பக்கம் இழுப்பதற்கும் வலைவீசி வருகிறார். இந்த வலையில் சிக்கும் முக்கியப் பிரமுகர்களுக்கு சில வாக்குறுதிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ' தினகரனோடு மோதுவது திவாகரனுக்கு நல்லதல்ல... தினகரனை எதிர்த்தவர்கள் யாரும் நிம்மதியாக வாழ்ந்ததில்லை' என்ற புதிய சென்டிமெண்ட் பரவி வருகிறது.
மகாதேவன் மோதல்
இதுகுறித்து நம்மிடம் விவரித்தார் மன்னார்குடி கோஷ்டி உறவினர் ஒருவர், " எட்டு ஆண்டுகளாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த தினகரன், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகே லைம்லைட்டுக்கு வந்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்றபோது, அவரிடம் கட்சிப் பதவி கேட்டார் மகாதேவன். இதற்கு சசிகலா மறுத்துவிட்டார். ' நான் பேசிட்டே இருக்க மாட்டேன். துப்பாக்கியைத் தூக்குவேன்' என்றெல்லாம் குடும்பத்தினரிடம் பேசி வந்தார் மகாதேவன்.
மாரடைப்பால் மரணம்
அவருக்கும் தினகரனுக்கும் எந்தச் சூழ்நிலையிலும் ஒத்துப் போகாது. சசிகலாவின் சொந்த அண்ணன் வினோதகனின் மகன்தான் மகாதேவன். தினகரனோடு கடுமையான மோதலையும் கடைபிடித்து வந்தார். இந்தநேரத்தில் யாரும் எதிர்பாராத நேரத்தில் மாரடைப்பால் இறந்து போனார். நேற்றோடு அவர் இறந்து ஓராண்டு ஆகிவிட்டது. அதேபோல், தினகரனைக் கடுமையாக எதிர்த்தவர் எம்.நடராஜன்.
நடராஜன் மரணம்
ஒருகட்டத்தில் அவரும் உடல்நலமில்லாமல் பாதிக்கப்பட்டார். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு நன்றாகவே தேறிவிட்டார். அவர் இறப்பார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. அதேபோல், அனுராதாவின் அம்மா சந்தானலட்சுமியும் தினகரனுடன் மோதல்போக்கைக் கடைபிடித்து வந்தார்.
சந்தானலட்சுமி மரணம்
அ.தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளராக தினகரன் நியமிக்கப்பட்டபோது, ' என் மகனும் மாநிலப் பொறுப்பில் இருந்தவன்தானே. உனக்கு மட்டும் பதவி வாங்கிவிட்டு, என் மகனை வெறும் உறுப்பினராக மட்டும் சேர்த்துக் கொண்டது எந்த வகையில் நியாயம்?' எனக் கேள்வியெழுப்பினார். அவரும் இறந்துபோனார்.
உறவினர்கள் அறிவுறுத்தல்
இப்போது திவாகரன் குறித்துப் பேசும் தினகரன், ' அவர் உடல்நலமில்லாமல் இருக்கிறார். அதை முதலில் கவனிக்கட்டும்' எனப் பேசி வருவது, குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ' இரண்டு முறை இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் நீங்கள். தயவு செய்து கொஞ்சம் ஓய்வெடுங்கள். அனைத்தையும் ஜெய் ஆனந்த் பார்த்துக் கொள்ளட்டும்' என திவாகரனிடம் அறிவுறுத்தியுள்ளனர். அவர் இதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை" என விவரித்தவர்,
ஜெயலலிதா மரணம்
" பொதுவாக, ஓ.பி.எஸ் மீதுதான் இப்படியொரு சென்டிமெண்ட்டைச் சொல்வார்கள். சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட சில அமைச்சர்கள் வீடுகளில் ரகசிய ரெய்டு நடத்தப்பட்டது. இதற்கு அடுத்துவந்த நாள்களில் உடல்நலமில்லாமல் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு, மரணமடைந்தார் ஜெயலலிதா.
இருவருக்கும் ஒற்றுமை
முதல்வர் பதவியில் இருந்து பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்தார் சசிகலா. அடுத்து வந்த நாள்களில் சிறைக்கு அனுப்பப்பட்டார் சசிகலா. ஓ.பி.எஸ்ஸை எதிர்ப்பவர்களுக்கு இதுதான் கதியாக இருந்தது. தினகரனால் கொண்டு வரப்பட்டவர் ஓ.பி.எஸ். இந்த இருவருக்கும் இடையில்தான் இப்படியொரு ஒற்றுமை இருக்கிறது" என அதிர வைத்தார் அவர்.