டெங்கு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தவில்லை... கடையநல்லூரில் கட்டிட உரிமையாளருக்கு அபராதம்!
டெங்கு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தாதது ஆய்வின் போது கண்டறியப்பட்டதால் கடையநல்லூரில் கட்டிட உரிமையாளருக்கு மாவட்ட நிர்வாகம் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
திருநெல்வேலி : டெங்கு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தாதது ஆய்வின் போது கண்டறியப்பட்டதால் கடையநல்லூரில் கட்டிட உரிமையாளருக்கு மாவட்ட நிர்வாகம் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. கடந்த வாரத்தில் புதிதாக கட்டிடம் கட்டும் உரிமையாளர்களை அழைத்து மாவட்ட நிர்வாகம் ஆலோசனை நடத்திய நிலையில் விதிகள் கடைபிடிக்கப்படாததால் இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திப் நந்தூரி கடந்த 7ஆம் தேதி கடையநல்லூரில் நேரடி ஆய்வின்போது அதிகாரிகளுக்கு அளித்த உத்தரவின் பேரில் தென்காசி கோட்டாட்சியர் ராஜேந்திரன், சங்கரன்கோவில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர், டாக்டர். சோமசுந்தரம், ஆணையாளர் அயூப்கான் ஆகியோர் சேர்ந்து புதிய கட்டுமான கான்ட்ராக்டர்களிடையே கடந்த 8ம் தேதி அன்று ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் தாங்கள் புதிதாக கட்டும் கட்டிடங்களில் டெங்கு உற்பத்தியை தடுக்க வேண்டும் மீறுவோர் மீது அபராதம் விதித்தும் மற்றும் புதிய குடிநீர் இணைப்பு, கட்டிட வரைபட உரிமம் வழங்க இயலாது என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் ரகுமானியாபுரம் 8, 9, 10வது தெருக்களில் ஆய்வு செய்தபோது சேக் மைதீன்,ரகுமானியாபுரம் 8வது தெரு, சேக் மைதீன்,என்பவர் புதிதாக கட்டி வருகின்ற கட்டிடத்தினை ஆய்வு செய்தபோது கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு உடனடியாக சுத்தம் செய்ய எச்சரிக்கை விடுத்தும் இன்று மதியம் வரை சரி செய்யாமல் இருந்ததால் மேற்படி கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000/- அபராதம் விதித்தும், கட்டிடத்திற்கு சீல் வைத்தும் நகராட்சி ஆணையாளர் அயூப்கான் உத்தரவிட்டார்.