காஞ்சிபுரம் அருகே திருமணம் ஆன 6 மாதத்தில் புது மாப்பிள்ளை கொலை.. பிணத்துடன் உறவினர்கள் மறியல்
காஞ்சிபுரம் அருகே திருமணம் ஆன 6 மாதத்தில் புது மாப்பிள்ளை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அருகே திருமணம் ஆன 6 மாதத்தில் புது மாப்பிள்ளை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகா பில்லாதாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ். 32 வயதான இவருக்கும் 26 வயதான புனிதாவுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
புஷ்பராஜ் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். கடந்த 20-ந் தேதி வேலைக்கு சென்ற புஷ்பராஜ் அதன்பிறகு வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
புதுமாப்பிள்ளை கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் காஞ்சிபுரம் மாவட்டம் கோளிவாக்கம் ஏரிக்கரையில் புஷ்பராஜ் பிணமாக கிடந்தார். அவரை மர்மநபர்கள் யாரோ கொலை செய்துள்ளனர்.
உடல் ஒப்படைப்பு
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு புஷ்பராஜின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிணத்துடன் மறியல்
இந்த நிலையில் வெம்பாக்கம்-காஞ்சீபுரம் சாலையில் புஷ்பராஜின் உடலை வைத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
4 பேரிடம் விசாரணை
அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் புஷ்பராஜை கொலை செய்த நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக 4 பேரை பிடித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.