திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை.. கணவன், மாமியார் அதிரடி கைது!
புதுச்சேரியில் திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி: புதுச்சேரியில் திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
புதுச்சேரி, மூலக்குளம் என்.எஸ். போஸ் நகரை சேர்ந்தவர் லோகேஸ்வரன், இவர் ஜிப்மர் மருத்துவமனையில் தினக்கூலி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதனிடையே பி.காம்., மூன்றாமாண்டு மாணவியான புவனேஸ்வரி என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
கடந்த சில நாட்களாக, புதுமணத் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 21ம் தேதி இரவு கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தாய் வீட்டிற்கு சென்றுள்ளார் புவனேஸ்வரி.
பின்னர் உறவினர்கள் சமாதானம் கூறி, மீண்டும் கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். மறுநாள் காலை திடீரென புவனேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது கணவர் புவனேஸ்வரியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறினர்.
இதனையடுத்து புவனேஸ்வரி கொலை செய்யபட்டார் என புவனேஸ்வரியின் உறவினர்கள் புகார் தெரிவித்த நிலையில், போலீசார் புவனேஸ்வரியின் கணவர் லோகேஸ்வரன் மற்றும் மாமியார் கஸ்தூரி ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிந்து, கைது செய்தனர். பின்பு இருவரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.