ஊசி போட்டு கொன்றுவிடுவேன்.. நோயாளிகளை மிரட்டிய நர்ஸ்.. அரியலூர் மருத்துவமனையில் அதிர்ச்சி
அரியலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லை என குற்றம்சாட்டிய நோயாளிகளை ஊசி போட்டு கொன்றுவிடுவேன் என நர்ஸ் ஒருவர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர்: அரசு மருத்துவமனையில் டெங்கு சிறப்புப் பிரிவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லை என குற்றம்சாட்டிய நோயாளிகளை ஊசியை மாற்றிப்போட்டு கொன்றுவிடுவேன் என நர்ஸ் ஒருவர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மிரட்டி வருகிறது. இதனால் நாள்தோறும் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
காய்ச்சல் காரணமாக தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் அரியலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு சிறப்புப் பிரிவில் இரவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லை என நோயாளிகள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவர்கள் இல்லாததால் பொதுப்பிரிவில் உள்ள நர்ஸ்களே ஊசி போடுவதாகவும் கூறினர். இதுகுறித்த கேட்டதற்கு மணிமேகலை, ஷண்முகப்பிரியா ஆகிய இரண்டு நர்ஸ்களும் குற்றம்சாட்டிய நோயாளிகளை தரக்குறைவாக திட்டியுள்ளனர்.
ஊசியை மாற்றி போட்டு கொன்றுவிட்டு டெங்குவால் இறந்துவிட்டீர்கள் என்று கூறிவிடுவேன் என மிரட்டியுள்ளனர். அவரது மிரட்டலால் அதிர்ச்சியடைந்த நோயாளிகள் இப்படி கூறும் மருத்துவமனையில் எப்படி சிகிச்சை பெற முடியும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.