குழந்தை கடத்தும் கும்பல் என சந்தேகம்.. குலதெய்வ கோவிலுக்கு வந்தவர்கள் மீது தாக்குதல்.. மூதாட்டி பலி
திருவண்ணாமலை அருகே குல தெய்வ கோவிலுக்கு வந்தவர்களை குழந்தை கடத்தும் கும்பல் என பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.
Recommended Video
திருவண்ணாமலை: குல தெய்வ கோவிலுக்கு வந்தவர்களை குழந்தை கடத்தும் கும்பல் என பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.
சமீப காலமாக ஊருக்குள் வரும் வெளி மாநிலத்தவர் மற்றும் அறிமுகம் இல்லாதவர்களை குழந்தை கடத்தும் கும்பல் எனக் கருதி பொதுமக்கள் தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது.
வாட்ஸ்ஆப்பில் வலம் வரும் தகவலால் அப்பாவி பொதுமக்கள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. அண்மையில் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என வட மாநிலத்தவர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
குழந்தை கடத்தல்
இதனிடையே திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், குழந்தை கடத்தும் கும்பல் நடமாடுவதாக, 'வாட்ஸ் ஆப்' தகவல் வைரலாக பரவி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில், குழந்தைகள் கடத்தப்படுவது அதிகரித்து வருவதாகவும், வடமாநில கும்பல் குழந்தைகளை கடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
மூதாட்டி பலி
இந்நிலையில் திருவண்ணாமலை அருகே குல தெய்வ கோவிலுக்கு சென்ற சென்னை மற்றும் மலேசியாவை சேர்ந்த 5 பேர் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதில் மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உரிழந்தார்.
குல தெய்வ கோவில்
திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த அத்திமூரில் மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலுக்கு சென்னை பல்லாவரம் மற்றும் மலேசியாவை சேர்ந்த 5 பேர் தங்களின் குல தெய்வ கோவில் என வழிபட வந்துள்ளனர்.
குழந்தைகளுக்கு சாக்லேட்
கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்ட அவர்கள் அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு பிரசாதம் கொடுத்தனர். மேலும் மலேசியாவில் இருந்து வாங்கி வந்த சாக்லேட்களையும் அவர்கள் குழந்தைகளுக்கு வழங்கினர்.
சரமாரி தாக்குதல்
இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் அவர்களை குழந்தை கடத்தும் கும்பல் என நினைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத அவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என காரில் புறப்பட்டனர்.
மூதாட்டி பலி
ஆனால் அவர்களை விடாமல் விரட்டிச் சென்ற பொதுமக்கள் அவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதில் ருக்மணி என்ற 65 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
குழந்தையை கடத்தவில்லை
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்கள் குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் இல்லை என்றும் உண்மையிலேயே மலேசியாவை சேர்ந்தவர்கள்தான் என உறுதி செய்தனர். மேலும் மூதாட்டி குழந்தையை கடத்த வரவில்லை என்றும் குழந்தைகளை பார்த்ததால் தன்னிடம் இருந்த சாக்லேட்டுகளை அவரிடம் கொடுத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர்.
எஸ்பி உத்தரவு
பொதுமக்களின் தாக்குதல் படுகாயமடைந்த மற்ற 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்ய திருவண்ணாமைலை மாவட்ட எஸ்பி பொன்னி உத்தரவிட்டுள்ளார்.
4 தனிப்படைகள் அமைப்பு
மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க காவல்துறை இணை ஆணையர் ரவளி பிரியா தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. குல தெய்வ கோவிலுக்கு வந்தவர்களை குழந்தை கடத்தும் கும்பல் என பொதுமக்கள் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.