பழ மண்டியில் ரூ2000 கள்ளநோட்டு கொடுத்து பழம் வாங்கிய மர்ம நபர்.. வியாபாரிகள் ஷாக்!
வேலூர் பழ மண்டியில் மர்மநபர் ஒருவர் 2000 ரூபாய் கள்ளநோட்டைக் கொடுத்து பழம் வாங்கிச் சென்றிருப்பது வியாபாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்: வேலூர் பழ மண்டியில் 2000 ரூபாய் கள்ள நோட்டைக் கொடுத்து மர்மநபர் ஒருவர் பழம் வாங்கிவிட்டு மிதி சில்லரையாக ஆயிரத்து 750 ரூபாய் பணத்தையும் வாங்கிச் சென்றுள்ளார்.
மத்திய அரசு கடந்த 8ம்ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதனைத்தொடர்ந்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டையும் அறிமுகப்படுத்தியது. புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டை பெரும்பாலான மக்கள் இதுவரை பார்க்கவில்லை எனத் தெரிகிறத.
இதனை பயன்படுத்தி 2000 ரூபாய் நோட்டு வெளியான சில நாட்களிலேயே திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் அதை கலர் ஜெராக்ஸ் எடுத்து டாஸ்மாக் கடையில் சரக்கு வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மதுரை உட்பட பல இடங்களில் 2000 ரூபாய் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் வேலூர் பழ மண்டிக்கு நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் ஒருவர், 2000 ரூபாய் நோட்டைக் கொடுத்து 250 ரூபாய்க்கு பழம் வாங்கிவிட்டு மீதி 1750 ரூபாயை வாங்கிச்சென்றுள்ளார். அவர் சென்ற பிறகு அது நல்ல நோட்டுதான என்று உறுதி செய்ய கடைக்காரர் பக்கத்தில் உள்ள கடை உரிமையாளர்களிடம் ரூபாய் நோட்டை காண்பித்து விசாரித்துள்ளார்.
அப்போது அது போலி 2000 ரூபாய் நோட்டு என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். 2000ரூபாய் நோட்டுகள் இன்னும் மக்கள் மத்தியில் பரவவில்லை என்பதையறித்து மர்ம நபர்கள் கள்ளநோட்டை புழக்கத்தில் விடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.