அரசின் ஆவின் பாலில் புழுக்களா? சமூகவலைதளங்களில் பரவும் படத்தால் அதிர்ச்சி!
ஆவின் பாலில் புழுக்கள் இருப்பது போன்று சமூக வலைதளங்களில் வலம் வரும் படத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: ஆவின் பாலில் புழுக்கள் இருப்பது போன்ற படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. ஆவின் பால்தான் சுத்தமான பால் என அமைச்சர் கூறி வரும் நிலையில் புழு உள்ள படம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பால்வளத்துறை அமைச்சர் ரஜேந்திர பாலாஜி ஆவின் பால் மட்டும் தான் நல்ல பால். மற்ற தனியால் பால்கள் நச்சு தன்மை வாய்ந்தது என்றார்.
தனியார் பால் பாக்கெட்டுகள் 10 நாட்கள் ஆனாலும் கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் ரசாயனத்தை கலப்பதாகவும் குற்றம்சாட்டினார். இதனால் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படும் என்றும் பீதியை கிளப்பினார்.
தனியார் பால் விற்பனை சரிவு
இதுகுறித்து ஆய்வு செய்ய தனியால் பால் மாதிரிகள் புனேவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார். அமைச்சரின் இந்த பரபர குற்றச்சாட்டால் தனியார் பால் விற்பனை சரிந்தது.
தனியார் பாலை வாங்க அச்சம்
அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு பால் முகவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அமைச்சரே குற்றம்சாட்டியதால் தனியார் பாலை வாங்க மக்கள் அச்சமடைந்தனர்.
ஆவின் பாலில் புழுக்கள்
இந்நிலையில் அரசு நிறுவனமான ஆவின் பாலில் புழுக்கள் இருக்கும் படம் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் தீயாக பரவி வரும் அந்த படத்தில் பிரீசரில் வைக்கப்பட்டிருந்த ஆவின் ஆரஞ்சு பாலில் பெரிய பெரிய புழுக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
பரவும் படத்தால் அதிர்ச்சி
ஆவின் பால் பாதுகாப்பானது சுத்தமானது என கூறப்பட்டு வந்த நிலையில் அதில் புழுக்கள் இருக்கும் படங்கள் வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள பொதுமக்கள் இதுகுறித்து அரசு தெளிவு படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.