நீட்டில் குறைந்த மார்க்.. வெறுத்துப் போய் வீட்டை விட்டு வெளியேறிய சென்னை மாணவி.. பீகாரில் மீட்பு
நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்களை பெற்றதால் விரக்தியில் மாயமான சென்னை மாணவி பீகாரில் மீட்கப்பட்டார்.
Recommended Video
பாட்னா: நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற முடியாததால் விரக்தியில் மாயமான சென்னை மாணவி கோடீஸ்வரி பீகாரில் மீட்கப்பட்டார்.
சென்னை கீழ்ப்பாக்கம் நம்மாழ்பேட்டையைச் சேர்ந்தவர் கோடீஸ்வரி. இவர் பிளஸ் 2 முடித்துவிட்டு நீட் தேர்வு எழுதியிருந்தார்.
நேற்று முன் தினம் நீட் தேர்வு வெளியான நிலையில் அதன் முடிவுகளை அறிந்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றார் கோடீஸ்வரி. நீண்ட நேரமாகியும் அவரை காணவில்லை.
இந்நிலையில் பெற்றோருக்கு போன் செய்த கோடீஸ்வரி தன்னை விட்டு விடுமாறு கூறிவிட்டு போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளது குறித்தும் பெற்றோருக்கு எஸ்எம்எஸ் அனுப்பியிருந்தார்.
அண்மையில் நீட் தேர்வில் சோபிக்க முடியாமல் விழுப்புரம் மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டதால் கோடீஸ்வரியை காணாது அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
புகாரின் பேரில் போலீஸார் மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற விரக்தியில் பீகார் சென்றுள்ளதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் அங்கு சென்று தேடினர்.
அப்போது ஒரு ஹோட்டலில் அவரை போலீஸார் மீட்டனர். பிறகு புத்திமதிகளை கூறி சென்னை அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.