இதுதான் உணர்வு... சென்னை மெரினா போராட்டத்தில் ''சீருடையில்'' தில்லாக கலந்துகொண்ட காவலர்!!!
சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டத்துக்கு காவலர் ஒருவர் ஆதரவு தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டை தொடர்ந்து விவசாயிகள் தற்கொலையை தடுக்கவும் போராட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
சென்னை: மெரினாவில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் இன்று காலை திடீரென காவலர் ஒருவர் பங்கேற்றார். ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். காவலர் போலீஸ் சீருடையிலேயே போராட்டத்தில் பங்கேற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜல்லிக்கட்டுகு ஆதரவாக சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டம் 4வது நாளை எட்டியுள்ளது. மாணவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து மெரினாவில் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் மாணவர்களின் போராட்டத்துக்கு சீருடையில் வந்த காவலர் ஒருவர் ஆதரவு தெரிவித்தார். பின்னர் மைக்கை பிடித்த அவர் அரசுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
தமிழனாக போராடுகிறேன்
அவர் ''பேசியதாவது டெல்லி சென்றுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பும் போது ஜல்லிக்கட்டுடன் திரும்ப வேண்டும். இல்லையெனில் தற்போது தமிழனாக போராடும் தான் பின்னர் போலீஸாக போராடுவேன்.
மண்ணை சாகடித்துவிட்டனர்
விவசாயத்துக்கு செயற்கை உரங்களை பயன்படுத்தி மண்ணை சாகடித்துவிட்டார்கள். தற்போது விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அரசு என்ன செய்தது?
இதனை தடுக்க அரசு என்ன செய்தது? தற்போது ஜல்லிக்கட்டையும் சாகடிக்க முடிவு எடுத்துவிட்டதாக கூறினார். சீருடையில் இருக்கும் பல்வேறு காவலர்களின் சார்பில் தான் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தெரிவித்தார்.
தமிழனுக்கு ஒரு கெட்டப் பழக்கம்
காந்தி பிறந்த மண்ணில் தான் நேதாஜியும் பிறந்தார். தமிழனுக்கு ஒரு கெட்டப் பழக்கம் உள்ளது. தமிழன் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டான்.
Pooda Andha Aandvanae Namma Pakkam Irukkan #JusticeforJallikattu pic.twitter.com/zy4YzujbCm
— Robo Sankar (@Im_RoboSankar) January 19, 2017
விவசாயிகள் தற்கொலை தடுக்கனும்
உயர் அதிகாரிகளுக்கும் போராட்டத்தில் பங்கேற்க விருப்பம் உள்ளது. ஆனால் அவர்கள் பேச தயங்குகிறார்கள். மாணவர்கள் தங்களின் போராட்டத்தை இதோடு நிறுத்திக்கொள்ளாமல் விவசாயிகளையும் தற்கொலையை தடுக்கவும் மணல் திருட்டை தடுக்கவும் போராட முன்வர வேண்டும்''.
காவலரை கொண்டாடிய இளைஞர்கள்
இவ்வாறு அந்த காவலர் சீருடையில் போராட்டக்களத்தில் உரையாற்றினார். காவலரின் உரைக்கு வரவேற்பு தெரிவித்த மாணவர்கள் அவரை தூக்கி வைத்து கொண்டாடினர்.
காவலர்களால் அழைத்துசெல்லப்பட்ட காவலர்
இதையடுத்து அந்த இடத்துக்கு வந்த சக காவலர்கள் போராட்டத்தில் குதித்த காவலரை அழைத்து சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட காவலரின் பூர்விகம் ராமநாதபுரம் என்றும் பஞ்சம் பிழைக்க மதுரை வந்தததாவும் தெரிவித்துள்ளார்.அவர் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்துள்ளது. காவலர் ஒருவர் சீருடையில் மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அரசுக்கு எதிராக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.