ஜாதி ரீதியாக மாணவர்களை பிரித்து அமரவைத்த பள்ளி தலைமை ஆசிரியை.. கடலூர் அருகே பரபரப்பு
திட்டக்குடியில் சாதி ரீதியாக மாணவர்களை பிரித்து அமரவைத்த தலைமை ஆசிரியையால் பரபரப்பு ஏற்பட்டது.
திட்டக்குடி: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களை சாதி ரீதியாக பிரித்து அமரவைத்தது தொடர்பாக பெற்றோர்களுக்கும் தலைமை ஆசிரியைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலூகாவில் உள்ளது எழுத்தூர். எழுத்தூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியையாக அனுசியா என்பவர் பணிபுரிந்துவருகிறார்.
இவர் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளை சாதி ரீதியாகப் பிரித்து தலித் மாணவர்கள் மற்றும் மற்ற சமூக மாணவர்கள் என தனியாக அமரவைத்துள்ளார். இதனை மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். தங்கள் பிள்ளைகள் சாதி ரீதியாக பிரித்து அமரவைக்கப்பட்டதை அறிந்த பெற்றோர்கள் இது குறித்து தலைமை ஆசிரியை அனுசியாவிடம் கேட்டுள்ளனர்.
மாணவர்களை ஒரு தலைமை ஆசிரியையே இப்படி சாதி ரீதியாக பிரித்து அமரவைப்பது சரியான செயலா என்று பெற்றோர்கள் கேட்டுள்ளனர். இதற்கு தலைமை ஆசிரியை அனுசியா மாணவர்களுடைய பெற்றோர்களை தரக் குறைவாக பேசியுள்ளார். இதனால், மாணவர்களின் பெற்றோர்களுக்கும் தலைமை ஆசிரியைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தலைமை ஆசிரியை தொடர்ந்து பெற்றோர்களை அவமதிக்கும்படி தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதோடு அவர்கள் மீது காலணி எடுத்து வீசியுள்ளார். இதனால் கோபமடைந்த பெற்றோர்கள் பதிலுக்கு தலைமை ஆசிரியை மீதும் காலணி வீசியுள்ளனர். இதனால், எழுத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட எழுத்தூர் கிராம பொதுமக்கள் தலைமை ஆசிரியை அனுசியாவை எதிர்த்து பள்ளி வளாகத்தில் திரண்டதால் அங்கே பதற்றம் நிலவியது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த திட்டக்குடி வட்டாட்சியர் சத்தியன் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் எழுத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு விரைந்து வந்தனர். பின்னர், பள்ளித் தலைமை ஆசிரியையிடமும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பள்ளித் தலைமை ஆசிரியை அனுசியா மாணவர்களை சாதி ரீதியாக பிரித்து அமரவைத்தது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, தலைமை ஆசிரியை அனுஷியாவை மறு ஆணை வரும் வரை கட்டாய விடுப்பில் அனுப்பி முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
மாணவர்களுக்கு சமத்துவத்தை போதிக்க வேண்டிய ஆசிரியையே இப்படி மாணவர்களை சாதி ரீதியாக பிரித்து அமரவைத்து பிரிவினை ஏற்படுத்துவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.