புழல் சிறையில் பிளேடை விழுங்கி கைதி தற்கொலை முயற்சி... தொடரும் விபரீதம்
சென்னை புழல் சிறையில் கைதி ஒருவர் பிளேடை விழுங்கி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சென்னை புழல் சிறை அதிக பாதுகாப்பு உள்ள கண்காணிப்புகள் மிகுந்த சிறை என்று பெயர் பெற்றது. ஆனால் அந்த சிறையில் தற்போது, அடுத்தடுத்து தற்கொலை முயற்சிகள் நடப்பது சிறை கண்காணிப்பை கேள்விக் குறியாக்கி வருகிறது.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், புழல் சிறையில் மின்கம்பியை பல்லால் கடித்து தற்கொலை முயற்சியில் ராம்குமார் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர், ராம்குமார் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார் என்று சொல்லப்பட்டது.
இதேபோல அக்டோபர் 28ம் தேதி ராம்குமார் பாணியில் செல்ஃபோன் திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி ராஜா என்பவர் மின்சார வயரை கடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அப்புராஜ் என்ற ஆயுள் தண்டனைக் கைதி புழல் சிறையில் திடீரென குண்டூசியை விழுங்கி தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதற்கான காரணம் என்னவென்று இன்னும் தெரியவில்லை.
இந்த நிலையில் இன்று காலையில் கைதி பெரியசாமி பிளேடை விழுங்கி தற்கொலைக்கு முயற்சி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக பெரியசாமியை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்த போலீசார் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.