நெல்லையில் நீதிமன்ற வளாகத்தில் போலீஸை தாக்கி கைதி கடத்தலால் பரபரப்பு!
நெல்லை நீதிமன்ற வளாகத்தில் போலீஸாரை தாக்கி விட்டு கைதியை மர்ம நபர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை: நெல்லையில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்த வந்த கைதியை போலீஸாரை தாக்கி விட்டு கடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகேயுள்ள மறுகால்குறிச்சியைச் சேர்ந்தவர் உதயகுமார். மறுகால்குறிச்சி ஊராட்சி முன்னாள் தலைவரான உதயகுமாருக்கும் சூரன்கோட்டையைச் சேர்ந்த சுடலைகண்ணுவுக்கும் மண் அள்ளுவதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் உதயகுமாரின் ஆதரவாளர்களால் சுடலைகண்ணுவின் வீடு அடித்து நொறுக்கப்பட்டது. இது தொடர்பாக சுடலை கண்ணு அளித்த புகாரின் பேரில் நாங்குநேரி இன்ஸ்பெக்டர் பெலிக்ஸ் விசாரணை நடத்தி 15 பேர் மீது வழக்கு பதிவு செய்தார்.
இதில் உதயகுமாரை கைது செய்து இரவு நாங்குநேரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சதீஷ் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து சென்றனர். அப்போது அவரது ஆதரவாளர்கள் வேனை மறித்து சாலையில் தர்ணா போராட்டம் நடத்தினர்.
இந்த களபேரத்தில் 100-க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் வேனை சூழ்ந்து வேறு வழியாக உதயகுமாரை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் நாங்குநேரி போலீஸார் சதிஷ்குமார், கருணைராஜ் ஆகியோர் காயம் அடைந்தனர்.
படுகாயமடைந்த போலீசார் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து மறுகால்குறிச்சியை சேர்ந்த 100 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காவல் நிலையத்திற்கு திரண்டு வந்து சுடலைகண்ணுவின் வீட்டை சூறையாடியவர்களை கைது செய்ய வேண்டும் என முற்றுகையி்ட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.