இந்த சமூகத்துக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் பாலா?
Recommended Video
சென்னை: நாச்சியார் பட டீசர் மூலம் பெண்களை முகம் சுளிக்க வைத்துள்ள இயக்குநர் பாலாவுக்கு நமது வாசகர் தனிஸ்ஸ்ரீ எழுப்பியுள்ள கேள்வி + வெளியிட்டுள்ள கருத்து:
இயற்கையாய் நிகழும் நிகழ்வுகளை படமாக்குகிறேன் என்று கூறும் இயக்குனர் வரிசையில் தாங்களும் ஒருவர். தங்கள் "நாச்சியார்" திரைப்பட டீசர் வெளியாகி சில மணித்துளிகளிலேயே, தங்களுக்கு சிறந்ததொரு விளம்பரத்தை உருவாக்கிவிட்டீர். இதை மையப்பொருளாக வைத்து மக்கள் அனைவரையும் மாதர் சங்கங்களை நோக்கி கேள்விக்கணைகளை தொடுக்க வைத்து, மாதர் சங்க தலைவி வாசுகி அம்மா அவர்களையும் பதில் கணைகளை கொடுக்க வைத்து விட்டீர்.
தாங்கள் மட்டுமல்ல, இப்பொழுது வரும் இளைய இயக்குனர்களும் "பெண்கள் ஒரு போகப் பொருள் இல்லை" என்று விவாதங்களில் பங்காற்றிவிட்டு, தங்கள் படங்களில் ஏதோவொரு வகையில் பெண்களை தவறாக சித்தரிக்கவும், தவறான வார்த்தைகளை பேச சொல்லியும் காட்சியமைத்து உள்ளூர ஒரு வித இன்பம் அடைகிறீர்கள்.
பெண்களை இழிவுபடுத்தும் இயக்குநர்கள்
பெண்கள் புறம் கூறுபவர்களாகவும், பெண்கள் கடமைகளை தூக்கி எறிந்தவர்களாகவும் மற்றும் தவறான வார்த்தைகளை உபயோகிப்பவர்களாகவும் வண்ணத்திரையிலும், சின்னத்திரையிலும் மற்றும் ஆவணப்படங்கள் மூலமாகவும் இந்த உலகிற்கு உங்களால்தான் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். இங்கே கவனிக்கப் பட வேண்டியது, யார் அதிகம் பெண்களை இழிவு படுத்துகிறார்கள் என்றால், எல்லாம் எனது கையில் என்ற ஆணாதிக்க சிந்தனையாளர்களே. இதை கேட்டோமென்றால், நாங்கள் 10 % பெ(ஆ)ண்களின் வாழ்க்கையை படமாக்குகிறோம் என்பீர்கள். இதற்கும் ஒருபடி மேலே போய், பிடித்திருந்தால் படம் பாருங்கள் , இல்லை என்றால் படம் பார்க்காதீர்கள் என்ற விமர்சனம் வேறு செய்வீர்கள்.
10 சதவீதத்தை 90 சதவீதமாக காட்டுதல்
நம்முடைய நிகழ்வுகள் அனைத்தும் ஆவணங்களாக மாறுகின்றன என்பது நிஜமானால், இந்த 10% கதை மாந்தர்கள், மீதமுள்ள 90% மக்களை பிரதிபலிப்பதுப்போல மாயையை தோற்றுவிக்கிறீர்கள். அதையே வருங்கால சந்ததிக்கு கடத்துகிறீர்கள். கீழடி அகழ்வாய்வு நம்மிடம் உணர்த்துவது, நம் தமிழன் கழிவறை முதல் கட்டடம் வரை திட்டமிட்டு கட்டினான் அன்றே. இதுதான் நம் ஆவணங்கள். ஆனால் உங்கள் படங்கள் மூலம் எதை மக்களின் மனதில் பதிய வைக்க விழைகிறீர்கள்?
இயக்குநர்களே பதில் சொல்லுங்கள்
தங்களை மட்டும் குறி வைத்து இந்த கேள்வியை கேட்கவில்லை. அனைத்து இயக்குநர்களிடமும்தான். "வணிக ரீதியிலான சினிமாக்களை ஒன்றும் கேட்காமல் இதை மட்டும் கேட்கிறீர்கள்?" என்பீர்கள். நேரடியாகவே அவர்கள் தாங்கள் வணிகரீதியான சினிமாக்களை மட்டுமே எடுப்போம் என்று கூறி விட்டார்கள். இதையும் தாண்டி கவனிக்க வேண்டிய அம்சம், பெண் இயக்குனர்கள் சிலர் "இறுதி சுற்று" போன்ற படங்களை எடுத்து பெண்களின் அடுத்தகட்ட நகர்வுகளை, நிதர்சனங்களை எடுக்க தொடங்கி விட்டனர் இவர்களை வாழ்த்தி வரவேற்கும் தருணங்களில், தங்களை போன்ற மகத்தான ஆளுமைகள் உருவாக்கும் படங்கள் எங்கள் மனதில் ஒருவித பயத்தையும் / ஐயத்தையும் ஏற்படுத்துகிறது.
இக்கால பெண்களின் நம்பிக்கை
இன்றைய சூழ்நிலையில் "ஒரு பெண் வீட்டைவிட்டு வெளியில் வந்து கல்வி கற்பதும், ஆசிட் தாக்குதல்களில் இருந்து தப்பித்து கொள்வதும் ஒரு சாதனையாக கருதப்படும்" இவ்வேளையில் இது போன்ற படங்கள்/பதிவுகள் என்ன சொல்ல விழைகிறது? என்பது எங்களை போன்ற பெண்கள் முன்னேறிவர முட்டுக்கட்டையாய் இருக்கிறது.. இதை உணர்வீர்கள் என்ற நம்பிக்கையில் இக்கால யுவதிகள்.