அன்பைச் சொல்லும் அந்தப் படத்துக்கு ஏன் இசையமைக்கவில்லை என அல்லா கேட்டிருந்தால்...?- ரஹ்மான்
ஏஆர் ரஹ்மான்... ஆஸ்கர் தமிழன். உலகமே உற்று நோக்கிக் கொண்டிருந்த ஒரு பிரமாண்ட மேடையில் தாய்மொழி தமிழை உச்சரித்து பிரமிக்க வைத்தவர்.
தமிழரின் பெருமையான இந்த இசை மேதை, சமீபத்தில் ஈரானியப் படமான முகமது: தி மெசஞ்சர் ஆஃப் காட் படத்துக்கு இசையமைத்ததன் மூலம் மேலும் ஒரு பெருமையை தேடிக் கொண்டார்.
அந்தப் படத்தின் இசைக்காக உலகமே அவரைப் பாராட்டிக் கொண்டிருக்க, இந்தியாவில் மும்பையிலுள்ள ஒரு முஸ்லிம் அமைப்பு அவருக்கும், முகமது படத்தின் இயக்குநரான மஜித் மஜிதிக்கும் ஃபத்வா எனப்படும் சாபத்தை.. தண்டனையை அறிவித்துள்ளது.
இந்த ஃபத்வாவுக்கு ஏஆர் ரஹ்மான் அளித்துள்ள ஒரு விளக்கம், அவர் உண்மையிலேயே எத்தனைப் பக்குவம் மிக்க கலைஞன் என்பதை பறைசாற்றியுள்ளது.
அந்த விளக்கத்தின் தமிழாக்கம்:
"முகம்மது: மெசஞ்சர் ஆஃப் காட்' படத்தை நான் இயக்கவோ, தயாரிக்கவோ இல்லை. அதற்கு இசை மட்டுமே அமைத்தேன். அந்தப் பணியில் கிடைத்த ஆன்மிக அனுபவங்கள் பகிர விரும்பாத தனிப்பட்ட விஷயம்
'மெசஞ்சர் ஆஃப் காட்' படத்துக்கு நன்னம்பிக்கையின் அடிப்படையில்தான் இசையமைத்தேன். யாரையும் புண்படுத்துவது எனது நோக்கம் அல்ல.
ராஸா அமைப்பைச் சேர்ந்த நூரி என்பவர், 'இப்படியான படத்தை ஏன் தடுக்கவில்லை' என அல்லா, என்னிடம் கேட்டால் என்ன செய்வது?' என்று கூறியிருக்கிறார்.
இந்தப் படத்துக்கு இசையமைக்க முடிவு செய்ததும் இதே மாதிரியான காரணத்துக்காகத்தான். ஒருவேளை அல்லாவைச் சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கப் பெற்று, 'மனித இனத்தை ஒன்றிணைப்பது, தவறான புரிதல்களை சரிசெய்வது, அன்பைப் பற்றிய போதனைகளை, ஏழைகளின் முன்னேற்றம் பற்றிய சிந்தனைகளை பரப்புவது, தனது பெயரால் அப்பாவி மக்களை கொல்வதை விடுத்து மனித இனத்துக்கு சேவை செய்வது என்ற செய்தியை எடுத்துச் செல்லும் முகம்மதின் படத்துக்கு ஏன் இசையமைக்கவில்லை' என்று கேட்டால் நான் என்ன செய்வது?
இன்று நபிகள் குறித்த பல தவறான கருத்துக்களை இணையத்தில் காண முடிகிறது. சரியான புரிதல் இல்லாததால்தான் இந்த நிலை. இத்தகைய விஷயங்களை அன்பாலும் கனிவாலும் எதிர்கொள்ள வேண்டும்.
மேலும், காட்சி ஊடகத்தின் வாயிலாக மக்களிடம் சரியான விஷயங்களை கொண்டு சேர்த்து புரியவைக்க வேண்டும் என்றும் நான் எப்போதும் நினைத்திருந்தேன்.
மத சுதந்திரம் இருக்கும் இந்திய நாட்டில் வாழும் அதிர்ஷ்டம் நமக்குக் கிடைத்துள்ளது. இங்கே அனைவரது நோக்கமும் அமைதியான, வன்முறையில்லாத வாழ்க்கையை வாழ்வதே.
நான் இஸ்லாமிய மார்க்கத்தின் அறிஞர் அல்ல. பாரம்பரியத்தையும், பகுத்தறிவையும் ஒரே சீராக நான் பின்பற்றுகிறேன். கீழை நாடுகளிலும், மேற்கத்திய தேசங்களிலும் நான் பயணிக்கிறேன், வாழ்ந்து வருகிறேன். அனைவரையும் நேசிக்க முயற்சிக்கிறேன்.
பிரச்சினையை கருணையோடும், கண்ணியத்தோடும் கையாள்வோம்; வன்முறையால் அல்ல. மன்னிப்புக் கோருவோம், உலகில் துன்புறுபவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம். நபிகளின் இயல்பை பிரதிபலிப்பது போலவே பிரார்த்தனை செய்வோம்."
சல்யூட் ரஹ்மான் பாய்!