சென்னை காவல்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை:ரூ.5 லட்சம் சிக்கியது
காவல்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் 5 லட்சம் சிக்கியது.
சென்னை: சென்னை காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 5 லட்சம் ரூபாய் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை திருமங்கலம் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் சில கட்டப்பஞ்சாயத்துகள் நடைபெற்று வருவதாகவும், சில அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் வெள்ளிக்கிழமை இரவு சோதனை மேற்கொள்ள அலுவலகத்தினுள் சென்றனர்.
அப்போது திருமங்கலம் காவல் உதவி ஆணையர் கமீல்பாட்ஷா பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவருடன் அவரது நண்பரும், கொடுங்கையூர் கட்டுமான நிறுவன உரிமையாளருமான செல்வமும், உதவி காவல் ஆய்வாளர் பாண்டியராஜனும் உடனிருந்தனர்.
லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் திடீரென அலுவலகத்துக்குள் நுழைந்ததால், அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற சோதனை நேற்று வரை நீடித்தது.
இந்த சோதனையில் உதவி ஆணையர் கமீல்பாட்ஷாவின் நண்பரான செல்வத்திடமிருந்த ரூ,2,58,500 மற்றும் உதவி ஆணையர் அறையிலிருந்த ரூ.2,50,000 ஆகியவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், அவர்கள் அதிகாரிகளிடம் முறையான தகவலை அளிக்கவில்லை என தெரிகிறது.
இதனையடுத்து துறைரீதியாக விசாரணை நடத்த உயரதிகாரிகளுக்கு ஆணையர் ஏ.கே.விசுவநாதன் உத்தரவிட்டுள்ளார்.