கனிமொழி, ஆ.ராசாவிற்கு கோபாலபுரத்தில் விருந்து...
கனிமொழி, ராசாவிற்கு திமுக தொண்டர்கள் பூ மழை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னை: திமுக தொண்டர்களின் பிரம்மாண்ட வரவேற்பில் கனிமொழியும், ஆ. ராசாவும் திக்குமுக்காடி போயினர். விமான நிலையத்தில் இருந்து கோபாலபுரத்திற்கு வந்த இருவருக்கும் மதிய விருந்து அளிக்கப்படுகிறது.
2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்ட அனைவரும் இந்த வழக்கில் இருந்து விடுக்கப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களுடன் நிருபிக்க அரசு தரப்பு தவறி விட்டதாக நீதிபதி தெரிவித்தார்.
இந்த தீர்ப்பு வெளியானதும், டெல்லி சிறப்பு நீதிமன்றம் முன்பு கூடியிருந்த திமுக தொண்டர்கள் திரண்டு கொண்டாடினர். பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சென்னை உட்பட பிற பகுதிகளிலும் திமுக தொண்டர்கள் திரண்டு பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
உறுதிமொழி பத்திரம்
விடுதலை பற்றிய அறிவிப்பு வெளியான உடனேயே இருவரும் சென்னை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று பாட்டியாலா நீதிமன்ற வளாகத்திற்கு வந்த ஆ.ராசா தன் உறுதிமொழிப் பத்திரத்தை தாக்கல் செய்துவிட்டு நீதிமன்ற அலுவலகத்துக்குச் சென்று தனது பாஸ்போர்ட்டைப் பெற்றுக்கொண்டார்.
|
பூ மழை தூவி வரவேற்பு
டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய கனிமொழி, ஆ.ராசாவிற்கு தொண்டர்கள் பூ மழை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்திற்கே வந்து தங்கை கனிமொழியை வரவேற்றார் ஸ்டாலின். தொண்டர்களின் வரவேற்பில் கனிமொழியும், ஆ. ராசாவும் திக்குமுக்காடிப் போயினர்.
|
களை கட்டிய கோபாலபுரம்
கோபாலபுரத்தில் தொண்டர்கள் குவிந்துள்ளதால் திருவிழா கோலம் பூண்டுள்ளது. பூக்கள், தோரணங்கள் என கனிமொழி வசித்து வரும் சிஐடி காலனி வீடும் களைகட்டியுள்ளது. வாழ்த்து கோஷமிட்டு கனிமொழியை வரவேற்றனர்.
|
கருணாநிதியிடம் ஆசி
வழக்கில் இருந்து விடுதலையான கனிமொழியும், ஆ.ராசாவும் தொண்டர்கள் மத்தியில் நீந்தி வந்து கோபாலபுரத்தில் திமுக தலைவர் கனிமொழியிடம் ஆசி பெற்றனர். கோபாலபுரத்தில் அனைவருக்கும் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.