சென்னை வந்த கனிமொழி, ஆ.ராசா... விமான நிலையத்திற்கு நேரில் வந்து வரவேற்ற ஸ்டாலின்
இனி எல்லாமே வெற்றிதான் எங்கும் எதிலும் வெற்றிதான் என்று திமுக மகளிர் அணியினர் கூறி வருகின்றனர். 2ஜி வழக்கில் இருந்து விடுதலையாகி சென்னை வந்த கனிமொழி, ராசாவை விமானநிலையத்திற்கு நேரில் வந்து வரவேற்றார்
சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் இருந்து விடுதலையான கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் இன்று டெல்லியிலிருந்து விமானத்தில் சென்னை திரும்பினர். நிரபராதியாக திரும்பி வந்த தங்கை கனிமொழியை செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து வரவேற்றார்
இந்தியாவிலே மிகப் பெரிய ஊழல் என்று பேசப்பட்ட 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் ஆ. ராசா , கனிமொழி உள்ளிட்ட 14 பேரும் விடுவிக்கப்பட்டனர். அவர்கள்மீது போடப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதால் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக நீதிபதி கூறியுள்ளார்.
வழக்கு விசாரணைக்காக டெல்லி சென்றிருந்த கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் 2ஜி வழக்கில் விடுதலையான பின்னர் சென்னை திரும்பினர். விமானநிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
நிரபராதியாக சென்னை திரும்பிய கனிமொழியை வரவேற்க விமான நிலையத்திற்கு நேரில் வருகை தந்தார் மு.க.ஸ்டாலின்.
திமுக மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். இது எங்களின் வெற்றி இனி எங்கும் எதிலும் வெற்றிதான் என்று மகளிர் அணியினர் மகிழ்ச்சி பெருக்குடன் கூறினர். எங்களுக்கு புத்தாண்டு இப்போதே வந்துவிட்டது என்றும் தெரிவித்தனர்.
விமான நிலையம் அருகே உள்ள பகுதிகளில் ஆங்காங்கே கனிமொழியைப் புகழ்ந்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என விமானநிலைய பகுதியே களைகட்டியுள்ளது.