ராசா கைய வச்சா அது ராங்கா போனதில்லை- ஆ.ராசாவுக்கு ஸ்டாலின் பாராட்டு
ராசா கைய வச்சா அது ராங்கா போனதில்லை என்று 2ஜி குறித்த புத்தகம் எழுதிய ஆ.ராசாவை ஸ்டாலின் பாராட்டினார்.
Recommended Video
சென்னை: ராசா கைய வச்சா அது ராங்கா போனதில்லை என்ற பாடலுக்கு ஏற்றவாறு ஆ.ராசா புத்தக வெளியீட்டு விழாவை நடத்துகிறார் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடிக்கு ஊழல் நடைபெற்றதாக திமுகவின் ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் மீது சிபிஐ குற்றம்சாட்டியது.
இதுதொடர்பாக வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் போதிய ஆதாரங்களை சிபிஐ தாக்கல் செய்யாததால் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி விடுதலை செய்தார்.
ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு என்பதை நீதிபதி தனது தீர்ப்பின் மூலம் கூறிவிட்டதாக திமுக மகிழ்ச்சி பொங்க தெரிவித்தது. இந்நிலையில் 2ஜி அவிழும் உண்மைகள் என்ற நூலை திமுக முன்னாள் அமைச்சரும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருமான ஆ.ராசா எழுதியிருந்தார்.
அந்த புத்தக வெளியீட்டு விழா இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கவிஞர் வைரமுத்து, சுப வீரபாண்டியன், இந்து குழுத்தின் தலைவர் ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது மு.க.ஸ்டாலின் பேசுகையில் ராசா கைய வச்சா அது ராங்கா போனதில்லை என்ற பாடலுக்கு ஏற்றவாறு ஆ.ராசா புத்தக வெளியீட்டு விழாவை நடத்துகிறார்.
2ஜி வழக்கின் தீர்ப்பு திராவிட இயக்கத்திற்கு கிடைத்த விடுதலையாகும். இது புத்தக விழா மட்டுமல்ல. ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் விடுதலையை கொண்டாடும் விழாவாகும் என்றார் ஸ்டாலின்.