தமிழகத்திற்கு ஒரு நல்ல செய்தி.. ஒரு கெட்ட செய்தி: தமிழ்நாடு வெதர்மேன்
குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை போன்றதொரு சிஸ்டம், வங்கக் கடலில் இலங்கை அருகே உருவாக வாய்ப்புள்ளது. 2009க்கு பிறகு இதுவரை இப்படி ஒரு சிஸ்டம் உருவானதில்லை.
சென்னை: தமிழகத்திற்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி உள்ளதாக கூறுகிறார் தமிழ்நாடு வெதர்மேன்.
சென்னை வெள்ளம் போன்ற சமயங்களில் துல்லியமாக அதை கணித்து பெயர் பெற்றது தமிழ்நாடு வெதர்மேன். பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக தளங்கள் வாயிலாக மக்களுக்கு உரிய எச்சரிக்கையை தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்தபடி இருந்தது.
தற்போது பேஸ்புக்கில் தமிழ்நாடுவெதர்மேன் பதிவு செய்துள்ள ஒரு தகவல் வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு சிறிது நம்பிக்கையை கொடுப்பதை போல உள்ளது.
பல வருடங்கள் பிறகு
இதுகுறித்து கூறியிருப்பதாவது: குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை போன்றதொரு சிஸ்டம், வங்கக் கடலில் இலங்கை அருகே உருவாக வாய்ப்புள்ளது. 2009க்கு பிறகு இதுவரை இப்படி ஒரு சிஸ்டம் உருவானதில்லை.
புயலாக மாறலாம்
இந்த காற்றழுத்த தாழ்வுநிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகவோ, புயலாக உருவாகவோ கூட வாய்ப்புள்ளது. கடலின் இயல்பு தன்மையை மாற்றும், Madden-Julian Oscillation இதற்கு காரணம் கிடையாது. Equatorial Rossby எனப்படும் அலைதான்.
வங்கம் நோக்கி நகரலாம்
இந்த அலையின்போது, வடக்கு திருவம் மற்றும் அதற்கு இணையாக தெற்கு துருவத்தில் இந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும். இந்த சிஸ்டம் தமிழகத்திற்கு மழையை கொடுக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ஆனால் தமிழகத்தின் அருகேயே உருவாகினாலும், இந்த காற்றழுத்த தாழ்வு நிலை, பர்மா அல்லது வங்கதேசம் நோக்கி நகர வாய்ப்பு அதிகம் உள்ளது.
மக்கள் துன்பம் தீருமா?
ஆனால் அப்படி நடக்காமல் இடையில் ஏதேனும் திருப்பம் ஏற்பட்டு தமிழகத்தின் வறட்சி தாக்கத்தை குறைக்குமளவுக்கு மழையை பெய்விக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மழை பெய்யும் என ஆசை காட்டிவிட்டு, பெய்யாமலும் போக வாய்ப்புள்ளது என்பதே அந்த பதிவின் மையக் கருத்தாகும்.