தூத்துக்குடி அருகே அரிய வகை திமிங்கலம் கரை ஒதுங்கியதால் பரபரப்பு
தூத்துக்குடி துறைமுகம் அருகே அரியவகை திமிங்கலம் கரை ஒதுங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகம் அருகே அரியவகை திமிங்கலம் கரை ஒதுங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் அருகே இறந்த நிலையில் அரிய வகை திமிங்கல சுறா இரவு கரை ஒதுங்கியது. இது சுமார் 4 மீட்டர் நீளமும், வாய் தட்டையாகவும் இருந்த இந்த திமிங்கலா சுறா ஒன்றரை டன் எடை இருக்கும்.
மேலும் திமிங்கல சுறாவின் மேல்பகுதி கருப்பாகவும், அவற்றில் வெள்ளை புள்ளிகளும் காணப்பட்டது. இதை பார்த்த அப்பகுதி மீனவர்கள் அது உளி வகையை சேர்ந்தது என்று தெரிவித்தனர்.
ஆனால் அதன் மீது எவ்வித காயமும் காணப்படவில்லை. இதனால் அந்த சுறா நோய் வயப்பட்டோ, தரையில் ஏற முயன்றோ, பிளாஸ்டிக் கவரை உண்டதாலோ இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறிதது தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீன் வளத்துறை அதிகாரிகள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
மேலும் அதன் முக்கிய உடல் பாகங்களை சோதனைக்காக எடுத்து சென்றனர். இதே போல் மன்னா்வளைகுடா கடல் வாழ் உயிரின பிரிவு வனத்துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு, கடற்கரையில் இருந்து தூக்கப்பட்ட திமிங்கல சுறா அங்கு பள்ளம் வெட்டி பாதுகாப்பாக புதைக்கப்பட்டது.