ரேஷன் கடை ஊழியரை அரிவாளால் வெட்டியே சாய்த்த கும்பல்.. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம்
மதுரை: மதுரை அருகே ரேஷன் கடை ஊழியர் ஒருவரை மர்மகும்பல் ஒன்று அரிவாளால் வெட்டி சாய்த்து தப்பித்துவிட்டு வெறித்தனத்தை அரங்கேற்றியுள்ளது.
மதுரை மாவட்டம் கீரைதுறை பகுதியில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. முக்கிய சாலை ஓரத்திலேயே இந்த கடை உள்ளது. அதனால் ஆள்நடமாட்டம் அதிகமாகவே எப்போதும் இருக்கும். இந்த கடையில் சாந்தி மற்றும் முனியசாமி ஆகியோர் ஊழியர்களாக உள்ளனர். சாந்தி, விற்பனையாளராகவும், எடையாளராக முனியசாமியும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை, கடைக்கு வந்த இருவரும் வழக்கம்போல் பணியாற்றி கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடைக்குள் திடுதிப்பென்று நுழைந்தது. அங்கிருந்த முனியசாமியை அரிவாளால் கண்மூடித்தனமாக சரமாரியாக வெட்டி சாய்த்து தப்பி ஓடியது. இந்த வெறித்தனமான தாக்குதலில் முனியசாமி சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இவ்வளவும் அங்கிருந்த பெண் ஊழியர் சாந்தியின் கண்முன்னாலேயே நடந்தது.
இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். எதற்காக முனியசாமி கொலை செய்யப்பட்டார்? முன்விரோதம் ஏதேனும் காரணமாக இருக்குமா என்பது குறித்து விசாரணை நடத்திவருவதுடன், படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கும்பலையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.