இனி தின்னத் தீனி கிடைக்காதே...!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், திமுக ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழியின் விடுதலை குறித்து நமது வாசகர் தனிஸ்ஸ்ரீ எழுதியுள்ள கருத்துக் கோர்வை:
ஒரு மாபெரும் தலைவரின் மகளாக இருப்பது எந்தளவுக்கு பெருமையோ அந்தளவுக்கு கொடுமையான ஒன்று தூற்றும் போது கலங்காமல் இருப்பது.
இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு பொருந்துகிறது. பல்வேறு ஊடகங்களும் (குறிப்பாக வட மாநில ஊடகங்கள்) போட்டிபோட்டுக் கொண்டு அவதூறுகளை அள்ளித் தெளித்தனர். அனைத்தையும் வாய்தா வாங்காமல் வழக்கை எதிர் கொண்டவர் கனிமொழி.
அவருடைய வாழ்க்கை மட்டுமல்ல, அவரை சார்ந்த கட்சியையும் விட்டுவைக்கவில்லை . எங்கெங்கு காணினும் சக்தியடா என்றார் பாரதி. ஆனால் இந்த சக்தி சென்ற இடங்களிலெல்லாம் 2G வழக்கைப் பற்றி கேட்காத நாளில்லை.
திமுகவைத் தோற்கடித்தது
அதோடு தேர்தலில் தி.மு.க தோல்வியை தழுவியதற்கு இதுவும் ஒரு காரணம். திராவிட இயக்கத்தை கலைத்து அதில் குளிர்காய நினைத்தவர்களுக்கு கிடைத்த சவுக்கடிதான் இந்த தீர்ப்பு.
சூரியனை மறைக்க முடியுமா
"சூரியனை கை மறைப்பார் இல்" என்ற வரிகளுக்கேற்ப உதயசூரியன் ஒளிவீச தொடங்கிற்று. இப்பொழுதும் ஊடகங்களுக்கு உணவு கொடுத்துள்ளனர். அவரின் பேட்டியை ஒளிபரப்பும் போது எத்தனை விளம்பரங்கள், எப்பொழுதும் இல்லாத அளவில்.
இப்போதும் ஏன் ஏற்க முடியவில்லை
இப்பொழுதும் ஊடகங்களால் இந்த தீர்ப்பை ஏற்று கொள்ள முடியவில்லை. அதனால்தான் "மேல்முறையீட்டை எப்படி எதிர்கொள்வீர்கள்?" என்ற கேள்விகள். ஏனென்றால் இதை வைத்துதான் ஏகப்பட்ட விவாதங்களை நடத்தி வந்தனர்.
இனி தின்னத் தீனி இல்லையே
இனிமேல், தின்ன தீனி கிடைக்கவில்லை. வைரமுத்து கூறுவார் "தீக்குச்சிக்கு தின்ன கொடுப்போம்" என்று அது போல இவ்வளவுநாள் அவலங்களை காட்டிய ஊடகத்திற்கு தின்ன அவல்(ள்) கொடுத்தது போதும். தீக்குச்சியை சுட்டு கொளுத்துவோம். சூரியனை சுடர்விட செய்வோம்.
- தனிஷ்ஸ்ரீ, சென்னை