தமிழ்நாடு என் அடையாளம் என்று கூற கூசுகிறது.. மஸ்கட்டிலிருந்து ஒரு குமுறல்
சென்னை: தமிழ்நாடு என் அடையாளம் என்று மார்தட்டிக் கூறியவன் இன்று அப்படிச் சொல்ல கூசுகிறேன். தலை குனிகிறேன் என்று மஸ்கட்டைச் சேர்ந்த நமது வாசகர் காளிதாஸ் வேதனையுடன் எழுதியுள்ளார்.
தூத்துக்குடியில் நடந்தேறிய கொடூர துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒட்டுமொத்த தமிழர்களையும் உலுக்கி எடுத்துள்ளது. ஏதோ சிரியா, இலங்கையில் நடந்ததைப் போல தூத்துக்குடியில் சொந்த பாதுகாப்புப் படையினராலேயே வேட்டையாடப்பட்ட மக்களுக்காக ஒவ்வொருவரும் ரத்தக் கண்ணீர் வடித்து வருகின்றனர்.
கோவை ஒண்டிப்புதூரைச் சேர்ந்த நமது வாசகர் காளிதாஸ் மஸ்கட்டில் வசித்து வருகிறார். தூத்துக்குடி சம்பவம் குறித்து அவர் வேதனை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ளதாவது:
தலை குனிகிறோம்
நேற்று வரை தமிழன் என்று உலகெங்கும் மார்தட்டியவன் , இன்று தமிழ்நாடு என் அடையாளம் என்று கூற கூசி தலை குனிகின்றேன். மனித உயிர்களை ஜனநாயக படுகொலை செய்த மனித மிருகங்களை மாற்றுக்கருத்து இன்றி மனதார வெறுக்கின்றேன் .
அராஜகம் இல்லையா
நூறு நாள் அறவழி போராட்டத்தின் அங்கீகாரம் மறுக்கப்பட்டது இல்லாமல் , ஒரு நாள் கூட எங்கள் கைகள் ஓங்குவதை உங்களால் பொறுக்கமுடியவில்லையா ?? அராஜகத்தின் ஆரம்பம் இல்லை.... உச்சம் இது...!
உங்களுக்காகவும்தானே போராடுகிறோம்
இன்னும் பல கொடும் காரியங்களை செய்ய காத்திருக்கும் மனித மிருகங்களே .. எங்கள் போராட்டம் உங்களுக்கும் சேர்த்துத்தான், புரிந்து கொள்ளுங்கள்.
உயிர் விட தயாரா
என் சொந்த பணம் 10 லட்சம் கொடுக்க நான் தயார், முன்னே வந்து உயிர் விட எந்த அரசியல்வாதியோ , அதிகாரியோ இல்லை காவலரோ தயாரா? இன்று ஒரு லட்சம் போராளிகளில் பன்னிரண்டு பேர் மட்டுமே வீரமரணம். ஒருநாள், மொத்த தமிழ்நாடும் உயிர்கொண்டு எழுந்து இந்த அடக்குமுறையில் இருந்து ஜனநாயகத்தை மீட்டு எடுக்கும். வேண்டும் என்றால், உங்கள் துப்பாக்கிகளை மேலும் தயார்செய்து கொள்ளுங்கள், எங்களுக்கு அச்சம் இல்லை!!!
அடுத்த குண்டு என் மீது பாயட்டும்
நெஞ்சம் படபடக்க, ஆனால் கைகள் கட்டப்பட்ட சூழ்நிலை கைதியாய் வெளிநாட்டில் பணிசெய்கிறேன். ‘ஒருநாள் திரும்பி வந்து, அடுத்த துப்பாக்கி குண்டை என் மார்பில் வாங்க முன்வந்து நிற்பேன்'என இன்று உயிர் நீர்த்த என் உறவுகளுக்கு உறுதி அளிக்கின்றேன் .
கண்ணீருடன்,
காளிதாஸ் ,
ஒண்டிப்புதூர், கோயம்புத்தூர்