மணப்பந்தலில் பொழிந்த பூக்கள்.. வாழ்த்திச் சென்ற மழைத்துளி.. வாசகரின் நெகிழ்ச்சி அனுபவம்!
சென்னை: நமது அன்பு வாசகர் கார்த்திக் ரகுராம். கோபிச்செட்டிப்பாளையம் அருகே கலிங்கியம் பகுதியிலிருந்து எழுதியுள்ள ஒரு மடல்...
இந்த நிகழ்வு நடந்து மூன்று ஆண்டுகள் கடந்து இருக்கும். என் காதலியிடம் அலைபேசியில் காதலை கூறி ஒரு வாரம் கடந்து நடந்த நிகழ்வு. அதுவரை கண் பார்த்து பேசியதில்லை, குறுஞ்செய்திகளே எங்களுக்குள் தூது சென்றது. அன்று ஊரை விட்டு இருபது கிலோமீட்டர் கடந்து இருக்கும் ஒரு கோவிலுக்கு செல்வது என முடிவு செய்யப்பட்டது.
அவளை ஒரு பேருந்து நிறுத்தத்தில் என் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டேன். ஆனாலும் பத்து கிலோமீட்டர் கடந்தும் எங்கள் உதடுகள் வார்த்தைகளை பரிமாறிக் கொள்ளவில்லை. ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டது. யாரும் அதிகம் பயணிக்காத மதிய வேளையில் பவானி சாலையில் பயணிக்கும்போது மழை வந்தே விட்டது.
எங்களுக்காகவே திறக்கப்பட்டது போல, ஒரு தேநீர் கடை இருந்தது. அகற்றப்படாமல் இருந்த பூமாலையும், சரியாக அழியாத திருநீறும் அந்த கடை திறந்து சில நாட்களே ஆனதை எடுத்துக் கூறியது. அங்கு தேநீர் கடை அக்காவை தவிர யாரும் இல்லை. மழைச்சாரல் மேனியை உரசும் அளவிற்கு ஒரு இடம் பிடித்து அமர்ந்தோம். தேநீரும் வந்தது, ஆனால் எங்கள் உதடுகளில் வார்த்தைகள் வரவில்லை. கண்கள் மட்டும் மௌன மொழி வாசிக்க, நான் பேச நினைத்த வார்த்தைகளை மழை இசைத்து கொண்டிருந்தது. தேநீரின் சூட்டை மழைக்காற்று வேகமாய் தனித்து கொண்டிருந்தது. மௌன மொழியுடன் தேநீர் கோப்பை காலியாவதற்கும், மழை விடுவதற்கும் சரியாக இருந்தது அந்த ஒரு மணி நேரம்...!
ஒரு வழியாக மௌனம் கலைத்து "அதிக மழை போல குளிர்தா..." இதுவே என்னவளிடம் நான் பேசிய முதல் கவிதை. அதற்கும் அவளின் கண்களே பதில் கொடுத்தது. தேநீருக்கும் பணம் செலுத்திவிட்டு சிறிது தூரம் பயணிக்கையில், லேசான தூரல் மழை மணப்பந்தலில் பொழியும் பூக்களை போல தூவி எங்களை வாழ்த்திவிட்டு சென்றது...
இன்று திருமனம் முடிந்து இரண்டு வருடங்களை நோக்கி பயணிக்கும் எங்கள் வாழ்க்கை, மணப்பந்தலில் சொந்தங்கள் கூடி வாழ்த்தி இருந்தாலும், எங்கள் காதலை முதலில் வாழ்த்தியது மழைதான்...!
மழை என்றுமே வாழ்க்கையின் தருணங்களில் நினைவுகளை சுமந்தே எங்களுடன் பயணிக்கிறது.
கார்த்திக் ரகுராம்
கலிங்கியம்
கோபிச்செட்டிபாளையம்.