தூத்துக்குடி போராட்டத்தில் வெற்றி.. மக்கள் போராட்டத்தை அடக்கிவிட முடியாது: மக்கள் அதிகாரம்
தூத்துக்குடி போராட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைத்துள்ளதால் ஆதரவளித்த மக்களுக்கு மக்கள் அதிகாரம் நன்றி தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கை உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதன் மூலம் தூத்துக்குடி போராட்டத்தில் குறிப்பிடத் தக்க வெற்றியை சாதித்துள்ளதாகவும் மக்கள் போராட்டத்தை அடக்கிவிட முடியாது என்றும் மக்கள் அதிகாரம் தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தின்போது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, மக்கள் அதிகாரம் அமைப்பினர் தொடரப்பட்ட தேசப் பாதுகாப்புச் சட்ட வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து மக்கள் அதிகாரம் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்,
"நிலத்தையும் நீரையும் காற்றையும் நஞ்சாக்கி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து வந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தி வந்த மக்கள் மீது மே 22 ஆம் நாள் கொடூரமாக துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரைக் கொன்றது தமிழ் நாடு அரசின் கொலைகார போலிசு படை.
மக்களைக் கொன்றதோடு நில்லாமல் போராட்டத்தில் முன்னணியில் நின்ற மக்கள் அதிகாரம் உட்பட போராடும் சக்திகள் மீது நூற்றுக்கணக்கில் வழக்குகள் போட்டும், மக்களுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்கிய வழக்கறிஞர்களை, தேசப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தும் எடப்பாடி அரசு, தனது கார்ப்பரேட் விசுவாசத்தைக் காட்டியது.
போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களின் வீடுகளுக்கு சென்று மிரட்டியது. கல்லூரி மாணவர்கள் உட்பட ஆறு மக்கள் அதிகாரம் தோழர்களை தேசப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டது.
தூத்துக்குடி படுகொலையை கடுமையாகக் கண்டித்த மக்கள் அரசு அடுத்தடுத்து சொன்ன பொய்களை நம்பத் தயாராக இல்லை. சமூக விரோதிகள், விஷமிகள் ஊடுருவி விட்டதாகவும் பயங்கரவாதிகள் ஊடுருவி விட்டதாகவும் பிரச்சாரம் செய்த அரசும் அதனை அப்படியே வாந்தியெடுத்த ஊடகங்களும், இவர்களின் ஊதுகுழலான ரஜினியும் மண்ணைக் கவ்வினர்.
அடுத்து மக்கள் அதிகாரம்தாம் தங்களை மூளைச் சலவை செய்ததாக அரசு செய்த பிரச்சாரத்தையும் புறந்தள்ளியதோடு, அரசின் அடக்குமுறைக்குப் பலியாகி சிறையில் வாடிய தோழர்களையும் மக்களையும் விடுவிக்க நாங்கள் நடத்திய சட்டப் போராட்டங்களை மக்கள் ஆதரித்தனர்.
கருத்தளவில் மட்டுமல்லாமல் ஏராளமான அளவில் நிதி உதவியளித்தனர். மக்களின் மாபெரும் பங்களிப்பால்தான் நாம் நடத்திய சட்டப் போர்களில் ஒரே குற்றச் சாட்டுக்கு ஒவ்வொரு தோழர்கள் மீதும் நூற்றுக் கணக்கில் போடப்பட்டிருந்த எப்.ஐ.ஆர்.களை ஒரே எப்.ஐ.ஆர். ஆக மாற்றி உத்தரவு பெற்றோம்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டகுழுவின் சட்ட ஆலோசகர்கள் வாஞ்சிநாதன், அரிராகவன் ஆகியோர் மீது போடப்பட்ட தேசப் பாதுகாப்பு சட்ட வழக்குகள் தகர்க்கப்பட்டன.
மக்கள் அதிகாரம் தோழர்கள் ஆறு பேர் மீது போடப்பட்ட தேசப்பாதுகாப்பு சட்ட வழக்கு இன்று தகர்க்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பொய் வழக்குகள்தாம் என்பதையும் அரசுதான் குற்றவாளி என்பதையும் தெளிவாகப் புரிந்து வைத்திருந்த மக்களின் பேருதவி இல்லாமல் இவ்வெற்றிகளை ஈட்டியிருக்க முடியாது.
அதே போல் நீதிமன்றத்தில் நாம் நடத்திய சட்டப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் நீதியின் பக்கம் நின்று கடுமையான உழைப்பை நல்கியுள்ளனர். அவர்கள் இல்லாமல் இந்த வெற்றிகள் சாத்தியமில்லை.
அரசு அடக்குமுறையை ஏவியதுடன், மக்கள் அதிகாரம் உள்பட பல போராடும் சக்திகளை நசுக்கும் நோக்குடன் கருத்துரிமையை முடக்கி, பொய்ப்பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டதை எதிர்த்து நம் பக்கம் பாஜக, அதிமுக தவிர ஏனைய எல்லா கட்சிகளும், அமைப்புகளும் போராட்டத்தின் நியாயத்தின் பக்கம் நின்று குரல் கொடுத்தன. நாம் நடத்திய ஆர்ப்பாட்டம், இரங்கல் கூட்டங்களில் பங்கேற்றன. இவர்களின் ஒத்துழைப்பும், வழக்கறிஞர்களின் கடுமையான உழைப்பும்,நேர்மையான ஊடகவியலாளர்களின் ஆதரவும் மக்களின் பங்கேற்பும்தான் தூத்துக்குடி போராட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை சாதித்துள்ளது.
இவர்கள் அனைவருக்கும் மக்கள் அதிகாரம் அமைப்பு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. வளர்ச்சியின் பெயரால் மக்கள் மீது ஏவப்படும் அனைத்து அரசு ஒடுக்குமுறைகளையும் மக்கள் சக்தியோடு இணைந்து முறியடிக்க உறுதிபூணுமாறு கேட்டுக் கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.