மீன் வாங்குவதில் தகராறு.. புதுச்சேரியில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை!
மீன்வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் புதுச்சேரியில் பிரபல ரவுடி ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
புதுச்சேரி: மீன்வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் புதுச்சேரியில் பிரபல ரவுடி ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் வில்லியனூரை அடுத்த பொறையூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது 35 வயதான மகன் ஜெகன், பிரபல ரவுடி. இவர் மீது புதுச்சேரியில் கொலை, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.
நேற்று மதியம் வில்லியனூரை அடுத்த பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்கிற சேட்டு உளவாய்க்கால் பகுதியில் மீன் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரிடம் ஜெகன், மீன் வாங்குவதற்காக பேரம் பேசினார்.
போலீஸில் புகார்
இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.இந்த நிலையில் ஜெகன் மீது வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் ராஜேந்திரன் புகார் செய்தார்.
உடனடியாக நடவடிக்கையில்லை
ஆனால் நேற்று முழு அடைப்பு போராட்டம் காரணமாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததால் ராஜேந்திரன் கொடுத்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை.
ஜெகன் மீது கோபம்
ராஜேந்திரன் போலீசில் புகார் கொடுத்ததை அறிந்த ஜெகன், நேற்று மாலை அவரது வீட்டுக்கு சென்று தகராறு செய்து வீட்டை சூறையாடியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்தார் ராஜேந்திரனின் மகன் நவீன்.
பெண்ணை பார்க்க
ஏற்கனவே நவீனுக்கும், ஜெகனுக்கும் மதுகுடிக்கும் இடத்தில் ஏற்பட்ட மோதலில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கண்டமங்கலத்தை அடுத்த சின்ன அமணங்குப்பம் கிராமத்தில் உள்ள உறவினர் பெண்ணை பார்ப்பதற்காக ஜெகன் சென்றிருப்பது நவீனுக்கு தெரியவந்தது.
திடீர் மின்தடை
இதையடுத்து நவீன் தனது நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றார். அப்போது பேசிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் திடீரென்று மின்தடை ஏற்பட்டது.
ரத்த வெள்ளத்தில் ரவுடி
இதை பயன்படுத்திக்கொண்ட நவீன் தனது நண்பருடன் சேர்ந்து ஜெகனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். தலை, முகத்தில் வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழுந்தார்.
போலீஸ்க்கு தகவல்
ஜெகன் இறந்ததை உறுதிசெய்துவிட்டு, அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதை பார்த்த கிராம மக்கள் கண்டமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனை
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜெகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரவுடி கொலையால் பதற்றம்
மேலும் இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தப்பியோடிய நவீன் மற்றும் அவரது நண்பரை தேடி வருகின்றனர். பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் கண்டமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.