எங்க ஸ்கூல்ல சேர்ந்தா ரூ. 1000 பரிசு தருவேன்.. அசத்தும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் சங்கராரபுரம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்றில் மாணவர்களை சேர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ரூ.1000 ரூபாய் பரிசுத் தொகை வழங்கி வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பொதுவாக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்ப்பதற்கே ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருகிறது. இந்நிலையில், அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க, பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் புதிய முயற்சி எடுத்துள்ளார்.
புதிதாக முளைக்கும் தனியார் பள்ளிகள்
தனியார் பள்ளியில் சேர்த்தால் தான் தனது பிள்ளைக்கு சிறந்த எதிர் காலம் உள்ளது என எண்ணும் பெற்றோர்கள் ஏராளம். இதனால் தனியார் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆங்காங்கே புதிது புதிதாக அவ்வப்போது முளைக்கும் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டே போகிறது.
அரசு பள்ளிகளின் நிலை
தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்து கட்டணக் கொள்ளைகளில் ஈடுபடுகின்றன என ஒருபுறம் கூறப்பட்ட போதிலும் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்தற்கே பெற்றோர்கள் ஆர்வம்காட்டி வருகிறார்கள். இதன் காரணமாக அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அரசு பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஆனாலும், பெற்றோர்களுக்கு தனியார் பள்ளிகள் மீதான மோகம் குறையவில்லை என்றே தோன்றுகிறது.
தலைமை ஆசிரியரின் புதுத் திட்டம்
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் மாணவர்களை சேர்ப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் தலைமை ஆசிரியர் ஒருவர் ரூ.1000 பரிசு வழங்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கொடியனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சுரேஷ். இவர், தான் பணிபுரியும் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க புதியதாக திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி முயற்சி மேற்கொண்டார்.
விடுமுறையில் பணி
கோடை விடுமுறை என்றால் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விடுமுறையில் இருப்பார்கள். ஆனால் இவரோ அந்த கோடை விடுமுறையின் போது அந்த பகுதியில் உள்ள கிராமங்களுகுச் சென்று, கொடியனூர் பள்ளியில் புதிதாக மாணவனைச் சேர்த்தால் அந்த மாணவனுக்கு ரூ.1000 பரிசு வழங்கப்படும் என்று புதிய திட்டத்தை அறிவித்தார். முக்கியமாக அது அரசு பணம் இல்லையாம், அவர் சம்பாதித்த பணத்தை தான் வழங்க முடிவு செய்திருக்கிறாராம்.
புதியதாக 10 மாணவர்கள்
இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி பள்ளி திறக்கப்பட்டதையடுத்து, கொடியனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதல் 2 நாட்களில் 10 மாணவர்கள் புதிதாக அந்த பள்ளியில் சேர்ந்துள்ளனர். தலைமை ஆசிரியர் சுரேஷ், தான் கூறிய படி புதிதாக சேர்ந்த ஒவ்வொரு மாணவனுக்கும் தனது சொந்த பணத்தில் இருந்து தலா ஆயிரம் ரூபாயை வழங்கினாராம். கொடியனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியரின் இந்த புதிய முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பராட்டு தெரிவித்துள்ளனர்.