ஃபுல் மப்பில் பள்ளிக்கு வந்த ஆசிரியர்.. தட்டிக்கேட்டவர்களை திட்டி தாக்கியதால் கைது!
புதுச்சேரியில் குடிபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர், தலைமை ஆசிரியரையும் சக ஆசிரியர்களையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்கியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி: புதுச்சேரி அருகே பள்ளிக்கு ஃபுல் போதையில் வந்த ஆசிரியர், தலைமை ஆசிரியரையும் சக ஆசிரியர்களையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இதையடுத்து பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி பனையடி குப்பத்திலுள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் சுப்பிரமணியன் என்பவர் வரலாற்று ஆசிரியராக பணி புரிந்து வந்தார். இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்ததாக தெரிகிறது.
இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆசிரியர் சுப்பிரிமணியன், மது அருந்திவிட்டு பணிக்கு வந்ததாகவும், ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும் தலைமை ஆசிரியர், கல்வித்துறையில் புகார் அளித்தார். அதனடிப்படையில் சுப்பிரமணியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஃபுல் போதையில் ஆசிரியர்..
இந்நிலையில் சுப்பிரமணியன் கடந்த மாதம் 24-ஆம் தேதி மீண்டும் ஃபுல் போதையில் பள்ளிக்கு வந்துள்ளார். அவரை பள்ளியை விட்டு வெளியே போகும்படி தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.
தலைமையாசிரியருக்கு அடி
அப்போது சுப்பிரமணியன் தலைமை ஆசிரியரையும், அங்கிருந்த சக ஆசிரியையும் இணைத்து தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். மேலும் தலைமை ஆசிரியரையும் அவர் அடித்துள்ளார். இதனைத் தட்டிக்கேட்ட மற்ற ஆசிரியர்களையும் வாய்க்கு வந்தப்படி திட்டி தீர்த்துள்ளார்.
போலீசில் புகார்..
இதுகுறித்து கல்வித்துறையிடம் மீண்டும் பள்ளி ஆசிரியர்கள் சார்பில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு, கல்வித்துறை அதிகாரிகள் பரிந்துரைத்தனர்.
ஆசிரியர் கைது - அதிர்ச்சி
அதன் பேரில், அரசு ஊழியர்களைப் பணிசெய்ய விடாமல் தடுத்தது, ஆபாசமாக பேசியது, கையால் தாக்கியது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியனை கைது செய்தனர். மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய ஆசிரியரே மது அருந்திவிட்டு சக ஆசிரியர்களுடன் மோதலில் ஈடுபட்டதும் அதற்காக கைது செய்யப்பட்டதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.