சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது லாரி மோதி பரிதாப பலி - வீடியோ
தேனியை அடுத்த லட்சுமிபுரத்தில் முதியவர் ஒருவர் சாலையைக் கடக்க முயன்றபோது அவர் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தேனி: தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் சாலையைக் கடக்க முயன்ற முதியவர் மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளத்தையடுத்த லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் வீட்டிலிருந்து கடைக்குச் சென்று பொருள் வாங்கிவிட்டு சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது திண்டுக்கல் - தேனி நெடுஞ்சாலையில் திண்டுக்கல்லை நோக்கி விரைந்து வந்த மினி லாரி ஒன்று முதியவர் பெருமாள் மீது மோதியது.
இதனால் அவர் அங்கிருந்து தூக்கியெறியப்பட்டு கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தகவலை அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே அதிகமான சாலை விபத்துகள் நடக்கின்றன. அதற்கு நீண்ட நெடுஞ்சாலைகளில் வேகத்தடைகள் இல்லாததும் முக்கிய காரணம் என பொதுமக்கள் பலமுறை வலியுறுத்தியும் முக்கிய சாலைகளில் வேகத் தடைகள் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.