ஜெயா டிவி, நமது எம்ஜிஆருக்கு போட்டி.. வருகிறது 'அம்மா டிவி' , 'நமது அம்மா'
அதிமுகவுக்கு என தனி தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள் தொடங்க முடிவு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளார்.
சென்னை: அதிமுகவுக்கு என தனி தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள் தொடங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களுக்கு ஆதரவாக ஒரு டிவி சேனலை கொண்டுள்ளது. திமுகவுக்கு ஆதரவாக கலைஞர் மற்றும் சன் குழும தொலைக்காட்சிகள் உள்ளன. இதேபோல் தேமுதிகவுக்கு கேப்டன் தொலைக்காட்சி பாமகவுக்கு மக்கள் தொலைக்காட்சி என அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுக்கு என ஒரு தொலைக்காட்சியை கொண்டுள்ளன.
இதேபோல் அரசியல் கட்சிகள் செய்தித்தாள்களையும் தங்களுக்கு ஆதரவாக நடத்தி வருகின்றன. கட்சியை மக்களிடையே கொண்டு சேர்க்க அரசியல்வாதிகள் கட்சி ஆரம்பித்த கையோடு கட்சியையும் தொடங்கி விடுகின்றனர்.
ஜெ. உயிரோடு இருந்தவரை..
ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை ஜெயா தொலைக்காட்சி அவருக்கு ஆதராவான செய்திகளை ஒளிபரப்பி வந்தது. அவரது தேர்தல் பிரச்சாரமாக இருந்தாலும் அரசின் நலத்திட்டங்கள் என அனைத்தையும் ஒளிபரப்பி வந்தது.
அதிமுகவில் பிளவு
ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகள், கட்சி மற்றும் ஆட்சியில் சசிகலா குடும்பத்தின் தலையீடு ஆகியவற்றால் பிளவு ஏற்பட்டது. இதையடுத்து அதிமுக ஓபிஎஸ் ஈபிஎஸ் வசமானது.
ஜெயா டிவி, நமது எம்ஜிஆர்
டிடிவி தினகரன் உட்பட சசிகலாவின் குடும்பத்தினர் அதிமுகவில் இருந்து ஒதுக்கப்பட்டனர். ஆனால் ஜெயலலிதாவுக்கு சொந்தமான ஜெயா டிவியும் நமது எம்ஜிஆர் நாளிதழும் சசிகலா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.
தினகரனுக்கு ஆதரவாக ஜெயாடிவி
இதனால் அதிமுக மற்றும் அரசு தொடர்பான செய்திகளை ஜெயா டிவியில் ஒளிப்பரப்புவதில்லை. மாறாக டிடிவி தினகரனுக்கு ஆதரவான செய்திகளையும் அரசுக்க எதிரான செய்திகளையும் ஒளிபரப்பி வருகின்றனர்.
டிவி சேனல் தொடங்க முடிவு
இதனால் அதிமுகவுக்கு என தனி ஊடக சப்போர்ட் கிடைக்கவில்லை. இந்நிலையில் அதிமுகவுக்கு என தனி தொலைக்காட்சி மற்றும் தனி செய்தித்தாளை தொடங்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது.
முதல்வர் அறிவிப்பு
அதிமுகவுக்கு என தனி தொலைக்காட்சி மற்றும் தனி செய்தித்தாள் விரைவில் தொடங்கப்படும் என இன்று நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் நடைபெற்று வருதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மருது அழகுராஜ்க்கு பொறுப்பு
அதில் நமது எம்ஜிஆர் நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ்க்கு பொறுப்பு வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவுக்கு என பிரத்யோகமாக இருந்த ஜெயா டிவி தற்போது தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதால் தனி தொலைக்காட்சி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நமது அம்மா
அதிமுக சார்பில் தொடங்கப்படவுள்ள நாளிதழுக்கு ‘நமது அம்மா‘ என பெயரிடப்படவுள்ளது. தொலைக்காட்சிக்கு ‘அம்மா டிவி‘ என்று பெயர் வைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.