விருதுநகர் மாவட்ட ஆட்சியராக சிவஞானம் ஐ.ஏ.எஸ் நியமனம்
சென்னை: விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இணை தலைமை தேர்தல் அதிகாரியாக உள்ள சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார். சிவஞானத்தை விருதுநகர் மாவட்ட ஆட்சியராக நியமித்து தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். சென்னை, திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர் தஞ்சை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள் நேற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த கோவிந்தராஜ் கரூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி மண்டல துணை கமிஷனர் அண்ணாதுரை, தஞ்சை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி துணைக்கமிஷனராக (கல்வி) இருந்த அசியா மரியம் நாமக்கல் கலெக்டராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஞானசேகரன், கடலூர் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி துணைக்கமிஷனர் டி.ஜி. வினய் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த ராஜாராமன் நகராட்சி நிர்வாக இணைக்கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தமிழக தலைமைச் செயலர் பி.ராமமோகன ராவ் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''தமிழக இணை தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த ஏ.சிவஞானம், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்'' என கூறியுள்ளார்.