திருவள்ளூர் குடியிருப்பு பகுதியில் பீதியை கிளப்பிய குட்டி விமானம்!
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே குடியிருப்பு பகுதியில் சாலையில் நின்றிருந்த சிறிய ரக விமானத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூரை அடுத்த தேவி மீனாட்சி நகரில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று வந்து நின்றது.
இதை கண்ட பகுதிவாசிகள் அதிர்ச்சியடைந்து திருவள்ளூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் போலீசார் அப்பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர்.
அப்போது பச்சை நிறத்தில் மூன்று சக்கரங்களுடன் சிறிய ரக விமானம் நிற்பதை கண்டனர். விமானத்தின் அருகில் நின்று கொண்டிருந்தவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் பெயர் மோகன் 30 என்பதும், ஏரோநாட்டிக்கல் பொறியியல் படிப்பை முடித்து பெங்களூரில் உள்ள விமான உதிரி பாகங்கள் பழுது பார்க்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது.
மேலும் திருவள்ளூர் அருகே உள்ள தனியார் கல்லுாரி மாணவர்களுக்காக சிறிய ரக விமானத்தை தயார் செய்ததும் தெரிய வந்தது. இதை அறிந்த பின் போலீசார் நிம்மதியுடன் சென்றனர். தகவலறிந்த அப்பகுதிவாசிகள் வியப்புடன் சிறிய ரக விமானத்தை பார்த்து சென்றனர்.