கம்ப்யூட்டர் சர்வீஸ் செய்யும் போது விபத்து - சிபியூ வெடித்து தூக்கி வீசப்பட்ட என்ஜீனியர் பலி
மேலூரைச் சேர்ந்த சாஃப்ட்வேர் என்ஜினீயர், கம்ப்யூட்டர் வெடித்து பலியான சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
மதுரை: மேலூரில் கம்யூட்டர் சர்வீஸ் செய்த போது எதிர்பாராத விதமாக சிபியூ வெடித்து சிதறியதில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் மரணமடைந்துள்ளார்.
உயிரிழந்தவரின் பெயர் ரகுநாதன் என்பதாகும். இவர் மதுரை மாவட்டம் மேலூர் அனுமார்கோவில் பகுதியில் வசித்து வந்தார்.
கம்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார். ரகுநாதனின் தந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து தாயகம் திரும்பிய அவர் மேலூரில் வசித்து வந்தார். பேங்க் ரோட்டில் கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார்.
புதன்கிழமை இரவு 11 மணிக்கு வீட்டில் யாரும் இல்லாத நிலையில் கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டிருந்தபோது, திடீரென கம்ப்யூட்டர் வெடித்துச் சிதறியதில் தூக்கி வீசப்பட்டு வீட்டின் வெளியே விழுந்துள்ளார்.
அக்கம் பக்கத்தினர் வெடிச்சத்தம் கேட்டு வந்து பார்த்த போது ரகுநாதன் பயங்கரத் தீக்காயங்களுடன் கீழே விழுந்து கிடந்தார்.
ரகுநாதனை மீட்டு உடனடியாக மதுரை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கம்ப்யூட்டர் சிபியூ வெடித்து ரகுநாதன் மரணமடைந்த சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறந்த ரகுநாதனின் தந்தை துரைப்பாண்டியனும் ஓராண்டுக்கு முன்பு வீட்டில் இருக்கும்போது கொதிக்கும் எண்ணெய் உடலில் கொட்டி உயிரிழந்திருக்கிறார். அந்த சோகம் மறையும் முன் ரகுநாதனின் உயிரிழப்பு உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மேலூர் காவல்நிலைய காவல்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.