கதையல்ல நிஜம்.. கோவையில் துறவியாக மாறிய தொழிலதிபர் மகன்
கோவையை சேர்ந்த தொழிலதிபரின் மகன் ஒருவர் துறவியாக மாறியிருக்கிறார்.
கோவை: கோவையை சேர்ந்த மனோஜ் ஜெயின் என்ற தொழிலதிபரின் மகன் நிமிட்ஸ் என்பவர் ஜெயின் மத துறவியாக மாறியிருக்கிறார். 19 வயது மட்டுமே நிரம்பி இருக்கும் இவர் துறவு வாழ்க்கைக்கு மாறியுள்ளார்.
இவர் துறவறம் செய்வதற்கான விழா மிகவும் பெரிய அளவில் நடத்தப்பட்டது. துறவியாக மாறியிருக்கும் நிமிட்ஸ் இருக்கும் பகுதியை சேர்ந்த மக்கள் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தனர்.
இதுவரை வாழ்ந்தது போல இனி பணக்கார வாழ்க்கை வாழ போவது இல்லை என்று நிமிட்ஸ் கூறியுள்ளார். இந்த நிகழ்வு கோவையில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை தொழிலதிபர்
கோவையின் ஆர்.எஸ்.புரம் மேற்கு சம்பந்தம் ரோடு பகுதியை சேர்ந்த தொழிலதிபர் மனோஜ் ஜெயின். இவருடைய மகன் நிமிட்ஸ் 19 வயது மட்டுமே நிரம்பியவர். இவர் இப்போதுதான் 12ம் வகுப்பு படித்து இருக்கிறார். ஜெயின் மத வழிபாட்டில் ஆர்வம் கொண்ட இவர் துறவியாக மாறும் எண்ணத்துடன் வாழ்ந்து இருக்கிறார்.
துறவியாக மாறினார்
இதன் காரணமாக துறவறம் குறித்து படிக்க முடிவு செய்து இருந்தார். இதனை தொடர்ந்து குஜராத் மாநிலம் சூரத்தில் குருகுல பள்ளி ஒன்றில் சேர்ந்தார். தற்போது இவர் துறவற கல்வி முடித்து பட்டம் பெற்றார். இந்த நிலையில் துறவியாக மாறிய அவர் கோவை திரும்பினார். இவரை வரவேற்க மிகவும் பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
கோலாகலமாக கொண்டாட்டம்
மினிட்ஸ் ஊருக்குள் வருவது ஊர்வலமாக நடத்தப்பட்டது. இந்த ஊர்வலம் சுக்ரவார் பேட்டையில் தொடங்கி ஏ.கே.என். நகர், பொன்னைய ராஜபுரம் வழியாக சென்றது. அங்கு இருந்து முனிஸ்வரர் கோவிலை சென்றடைந்தது. பின்னர் கடைசியாக சொக்கம் புதூர் பகுதியில் முடிவடைந்தது. நிமிட்ஸ் அலங்கரிக்கப்பட்ட குதிரையில் அங்கிருந்து ஊர்வலமாக வந்தார். ஜெயின் சமூக பெண்கள் நடனமாடியபடி தெருக்களில் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
பணக்கார வாழ்க்கை கிடையாது
இனி நிமிட்ஸ் பணக்கார வாழ்க்கை வாழ மாட்டார் என்று கூறப்பட்டு இருக்கிறது. மேலும் அவர் மொபைல் போன்ற எலக்ட்ரிக்கல் கருவிகளையும் பயன்படுத்த மாட்டார். மேலும் சொந்த வீட்டில் தங்க மாட்டார். கோவிலில் மட்டுமே தங்குவார். அவரது உணவை அவரே சமைத்து சாப்பிட வேண்டும். முக்கியமாக ஜெயின் மத முறைப்படி கையில் குச்சியை வைத்து கொண்டு நடமாட வேண்டும்