ஈரோடு அருகே.. மாமியார் குளிக்க போன நேரத்தில் 8 சவரன் நகையை அபேஸ் செய்த மருமகன்!
ஈரோடு: ஈரோட்டில் மாமியார் வீட்டில் 8 சவரன் நகையை திருடிய மருமகனை போலீஸார் கைது செய்தனர்.
ஈரோட்டில் உள்ள கல்யாண சுந்தரனார் வீதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (24). இவரது சின்ன மாமியார் நாகஜோதி, ஈரோடு அருகே உள்ள பள்ளியூத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், சந்தோஷ்குமார் சின்னமாமியார் நாகஜோதி வீட்டுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்றிருந்தார்.
அப்போது நாகஜோதி, அவரது மகள் நந்தினி ஆகியோர் தாங்கள் அணிந்திருந்த சுமார் 8 சவரன் நகையைக் வீட்டில் கழற்றி வைத்து விட்டு குளிக்கச் சென்றுள்ளனர். குளித்து விட்டு திரும்பி வந்தபோது, நகை காணமல் போனதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்த சந்தோஷ்குமாரையும் காணவில்லையாம்.
இதனால் சந்தேகமடைந்த நாகஜோதி, ஈரோடு தாலுகா காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். இது குறித்து சந்தோஷ்குமாரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், தான் நகையை திருடியதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து சந்தோஷ்குமாரை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து 8 சவரன் நகையை கைப்பற்றினர்.