எம்எல்ஏ-வுக்கு விண்ணை முட்டும் ஊதியம்... வீட்டு பக்கமே போகாத போலீஸ்காரருக்கு சொற்ப ஊதியமா?
தென்னிந்தியாவிலேயே தமிழக போலீசுக்குதான் குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது.
சென்னை: தொகுதி பக்கமே வராத அரசியல்வாதிகளின் ஊதியம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே வருகிறது. ஆனால் வீட்டு பக்கமே போகாமல் 24 மணி நேரமும் பணியில் உள்ள காவலர்களுக்கு சொற்ப ஊதியம் என்று ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.
அனைத்து தொழில்களுக்கும் குறிப்பிட்ட அளவு பணி நேரமும், வார ஓய்வும் உண்டு. ஆனால் காவல் துறைக்கு மட்டுமே ஓய்வோ அல்லது பணி விடுப்போ கிடைப்பது இல்லை. அவர்கள் 24/7 மருத்துவமனை போல் அழைத்தவுடன் பணியில் இருக்க வேண்டும்.
கிட்டதட்ட உயிரை கொடுத்து வேலை செய்யும் அவர்களுக்கு ஊதியமாவது நியாயமாக கிடைப்பதா என்றால் இல்லை. தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ், நல்ல நாள், கெட்ட நாள் என்று எதுவும் கிடையாது.
இரவு பகலாக பணி
இரவு பகல் பாராமல் எந்த நேரமும் மழையானாலும் சரி, வெயிலானாலும் சரி அதையெல்லாம் பார்க்காமல் வேலை பார்க்க வேண்டும். ஏதேனும் தனிப்பட்ட வகையில் விடுப்பு அளித்தால் சம்பந்தப்பட்டவர் பணி முடித்து கிளம்புவதற்குள் அந்த விடுப்பு ரத்தாகும் சம்பவங்களும் நடந்துள்ளது. இதனால் அவரின் குடும்பத்தினர் ஏமாற்றமடைவர்.
குறைந்த ஊதியம்
தென்னிந்தியாவிலேயே குறைந்த ஊதியம் பெறுவது நம் தமிழக போலீஸார்தான். அதிக அளவில் சம்பளம் பெறுவோரில் முதலிடத்தில் கேரளாவும், அதற்கடுத்த இடங்களில் ஆந்திரா, கர்நாடகாவும், கடைசி இடத்தில் தமிழகமும் உள்ளது. இது எத்தனை வேதனை அளிக்கக் கூடிய விஷயம்.
கால்கடுக்க காத்திருப்பு
ஜனாதிபதி, பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் தொடங்கி ஏரியா கவுன்சிலர் வரை யார் ஒரு விழாவுக்கு சென்றாலும் அவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து கொள்வது அந்தந்த மாநில போலீஸார். இதற்காக மணிக்கணக்கில் கால் கடுக்க காத்து கிடப்பர்.
வார விடுப்பு இல்லை
24 மணி நேரமும் பணியாற்றும் போலீஸாருக்கு ஓய்வு என்பது மிகவும் அவசியம். ஓய்வில்லாமல் வேலை பார்ப்பதால் ஒரு சில காவல் துறையினர் மன அழுத்தம் காரணமாக பணி செய்யும் இடத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறக்கும் சம்பவங்களும் ஈடேறுகின்றன.
பூவுக்குள் பூகம்பம்
வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு தான் போலீஸ் பணி கெத்தான பணி, நல்ல சம்பளம், கிம்பளம் என நினைக்கத் தூண்டும். ஆனால் பூவுக்குள் பூகம்பம் ஏற்பட்டால் எப்படியோ அப்படிதான் அவர்களின் வாழ்க்கையும் மனக்குமுறல்களும். ஒரு சில லஞ்சம் வாங்கும் போலீஸாரால் ஒட்டுமொத்த காவல் துறையையே அவமதிப்பது சரியல்ல.
கவுன்சலிங் மையம்
போலீஸாருக்கு கவுன்சிலங் மையம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் காவல் துறை மீதான மானியக் கோரிக்கைகளின்போது அறிவிக்கப்பட்டது. எத்தனை மையம் திறந்தாலும் அவர்களுக்கென்று வாரம் ஒரு நாள் விடுப்பை கட்டாயம் ஆக்கி ஷிப்ட் முறையில் பணியாற்ற வைக்கலாமே.
அரசியல்வாதிகளுக்கு மட்டும்
தொகுதி மக்களின் பிரதிநிதிகள் என்ற போர்வையில் எம்எல்ஏ-க்கள், எம்.பி.க்கள் ஏராளமான சலுகைகளை பெறுகின்றனர். எத்தனை முறை சம்பளம் உயர்த்தினாலும் நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது சம்பள பிரச்சினை எதிரொலிக்காமல் இருந்தது இல்லை. தொகுதிக்கே செல்லாமல் ஏசி அறையில் இருந்து ராஜ்ஜியம் நடத்தும் அரசியல்வாதிகளுக்கு அள்ளி கொடுக்கும் இந்த அரசாங்கம் பசி, பட்டினி, வெயில், மழை ஆகியவற்றில் அவதிப்படும் போலீஸாருக்கு கிள்ளியாவது வழங்கலாமே. தங்களுக்கு வயிறு இருப்பதை போல்தானே மற்ற அரசு ஊழியர்களுக்கும் உண்டு என்பதை நினைத்து பார்க்கக் கூடாதா.
என்ன கோரிக்கைகள்
பதவி உயர்வு, உரிய ஊதியம், வார விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளைதானே அவர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று கூறினால் மட்டும் போதுமா. அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றினால் அவர்களும் மகிழ்ச்சியடைவர்.
ஜெயலலிதா மறைவின் போது
ஒரு அரசியல் கட்சித் தலைவர் இறந்தால் அங்கு வன்முறை நடக்காமல் இருக்காது. பஸ்ஸை தீவைத்து எரிப்பதும், கடைகளை சூறையாடி கிடைத்ததை சுருட்டுவதும் நடைபெறும். ஆனால் சமீபத்தில் ஜெயலலிதா மறைந்த போது தமிழகத்தில் ஒரு சந்து பொந்தில் கூட எந்த கலவரமும், மோதலும் வெடிக்காமல் பார்த்துக் கொண்ட பெருமை நம் காவல்துறையையே சாரும். என்னதான் காவல் துறை குடியிருப்பு கட்டிக் கொடுத்தாலும் அதில் ஒரு நாளாவது தங்குவதற்கு அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க அரசு முன்வர வேண்டும். இதுதான் போலீஸார் குடும்பத்தினர், ஓய்வு பெற்ற காவல்துறை சங்கத்தின் குமுறல்களாகும்.