ஒரு சூரியன் மறைவால் சில நட்சத்திரங்கள் வர பார்க்கின்றன.. போட்டுத்தாக்கும் தமிழிசை!
திமுகவில் வீசி வரும் புயல் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுகவில் வீசி வரும் புயல் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
அழகிரியின் அதிரடியால் திமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. நாளை திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் அழகிரி இன்று கட்சி தொடர்பான பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்.
தனக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வேண்டும் என்றும் இல்லையெனில் கட்சியில் பிளவு ஏற்படும் என மிரட்டும் வகையிலேயே பேசி வருகிறார் அழகிரி.
அழகிரியால் அதிருப்தி
அழகிரியின் பேச்சால் ஸ்டாலின் ஆதரவாளர்களும் திமுக நிர்வாகிகளும் அதிருப்தி அடைந்துள்ளனர். திமுக தலைவர் கருணாநிதி மறைந்த துக்கத்தில் இருந்து இன்னும் யாரும் மீளாத நிலையில் அழகிரியின் இந்த செயல்பாடு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக திமுக நிர்வாகிகள் கூறுகின்றனர்.
தமிழிசை கருத்து
திமுகவில் வீசி வரும் இந்த பிளவு குறித்து மற்றக்கட்சிகள் இப்போதே கேலி கிண்டல் என தொடங்கிவிட்டன. இந்நிலையில் தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தரராஜனும் அழகிரியின் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
சூரியன் மறைவால்..
சென்னை மாதவரத்தில் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ஒரு சூரியன் மறைந்த பின்னர் சில நட்சத்திரங்கள் தோன்ற முயற்சி செய்கின்றன.
யார் மிளிரப்போகிறார்கள்?
அழகிரி செயல்பாடு எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். யார் மிளிரப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.