சட்டமன்ற உறுப்பினர் நடவடிக்கையால் திருச்செந்தூரில் டாஸ்மாக் கடை அகற்றம்!
திருச்செந்தூர் அருகே மதுக்கடை அகற்றப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயில் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த மதுக்கடை அகற்றப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருச்செந்தூர் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக உள்ளது. மேலும் சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர்.
இங்கு பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் இடையூராக மூன்று மதுபானக்கடைகள் உள்ளன. இந்த கடைகளை அகற்ற வேண்டும் என திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்திருந்தார்.
மேலும் இன்று திருச்செந்தூரில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து மாலையில் நெடுஞ்சாலைத்துறை இணை இயக்குநர் முன்னிலையில் மதுபானக் கடையை நெடுஞ்சாலையில் இருந்து அளந்து பார்க்கப்பட்டது.
அப்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி 500 மீட்டருக்குள் அதாவது 270மீட்டர் தூரத்தில் கடை செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இது குறித்து தக்க நடவடிக்கை எடுத்து இந்த கடையை மாவட்ட மேலாளர் சௌந்திர பாண்டியன் மூட உத்தரவிட்டார்.
அந்த கடை மாலை பூட்டப்பட்டது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் சந்தோஷமடைந்தனர். அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. முயற்சியால் மூடப்பட்டதால் பொது மக்கள், மற்றும் பக்தர்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்