காதல் திருமணம் செய்த இளம்பெண் மகனுடன் தூக்கிட்டு தற்கொலை.. பெற்றோர் புறக்கணித்ததால் சோகம்
பெற்றோர் புறக்கணித்ததால் காதல் திருமணம் செய்த இளம்பெண், தன்னுடைய மகனுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ராசிபுரம்: காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் மகனுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ராசிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராசிபுரம் பட்டணம் களரம்பள்ளியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு, ராசிபுரம் ராமநாயக்கன்பட்டியை சேர்ந்த சென்னப்பன் என்பவரின் உறவினர் வீட்டிற்கு கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். அப்போது அவருக்கும், சென்னப்பன் மகள் சரண்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதுபற்றி அறிந்த பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த 2013 அன்று இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டார். பின்னர், ராசிபுரம் காட்டூர் பகுதியில் தனியாக வசித்து வந்தனர். இவர்களுக்கு மிதுன் (2) என்ற மகன் உள்ளார்.
திருமணமானது முதல் இதுவரை சரண்யாவை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சந்திப்பதை தவிர்த்து வந்தனர். இதனால் அவர் மனமுடைந்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை மணிகண்டன் வெளியே சென்றுவிட்டு இரவு 10.30 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் மிதுன் இறந்து கிடந்தான். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மணிகண்டன் அறையில் சென்று பார்த்தபோது சரண்யாவும் துப்பட்டாவில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
மனைவி, மகன் இருவரும் இறந்து கிடந்ததை பார்த்து மணிகண்டன் கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், காதல் திருமணம் செய்ததால் தன்னை பெற்றோர் மற்றும் உறவினர்கள் புறக்கணித்ததால் மனமுடைந்த சரண்யா, தனது குழந்தையை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.