சென்னை கோயம்பேட்டில் பயணியின் பையை திருடிய திருடன்.. காவலரின் விரலை கடித்து துப்பியதால் பதற்றம்
சென்னை கோயம்பேட்டில் காவலரின் விரலை கடித்து துப்பிய திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை: கோயம்பேட்டில் காவலரின் விரலை கடித்து துப்பிய திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து தமிழகம் முழுவதும் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்றிரவு சென்னை கோயம்பேட்டில் பயணியின் பையை திருடன் ஒருவன் திருட முயன்றான்.
அப்போது பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் கார்த்திக் அந்த திருடனை விரட்டி பிடித்தார். இதனால் ஆத்திரமடைந்த திருடன் தப்பிப்பதற்காக காவலர் கார்த்திக்கின் விரலை கடித்து துப்பினான்.
விரலை கடித்து துண்டாக்கியபோதும் திருடனை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தார் காவலர் கார்த்திக். இதையடுத்து திருடனை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் அய்யப்பன் என தெரிய வந்துள்ளது. போலீசார் அய்யப்பனிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.